Friday, October 24, 2014

மெல்ல இறங்கிச் சென்றது - சிறுகதை

அண்ணனின் முகத்தினை மீண்டும் மீண்டும் பார்க்கின்றேன்

நெற்றி அப்படியே இருக்கின்றது. வழக்கமாக அவன் வைக்கும் சந்தனப் பொட்டின் இடம் மட்டும் வெறுமையாக தெரிகின்றது

நெற்றியின் கீழ் ஆழமாக காயம் தொடங்குகின்றது
மூக்கும் வாயும் சிதைந்து போகத் தொடங்கி பின்  வாயின் கீழ் உருக்குலைந்து கிடக்கின்றது
காதுகள் இருந்த இடம் தெரியவில்லை.

நிண நீரால் நிறைந்து கிடக்கின்றது அவன் முகம்.

கவனமின்றி தண்டவாளங்களினூடாக அவன் நடக்கையில் ஒரு ரயில் அவனை மிதித்து இருக்கலாம், அல்லது எவனோ அவனை தள்ளியும் விட்டு இருக்கலாம். இல்லை அம்மா இன்னொருவருடன் இருப்பதைக் கண்டு வெறுத்து அவன் அதற்கும் முன் பாய்ந்து செத்து இருக்கலாம்.

அவன் உடலை தலையின் கீழ் பகுதியில் பக்கவாட்டாக ரயில் பிளந்து விட்டிருந்தது. காணாமல் போய் 30 நாட்களின் பின் தான் அவன் உடலை கண்டு பிடிக்க முடிந்திருந்தது. காணாமல் போய் அவனை தேடும் பொழுது அவன் ரயிலால் மோதுண்டு இறந்து இருப்பான் என்று நாம் நினைக்கவில்லை.

கொழும்பின் கனத்தை மயானம் அருகில் இருக்கும் ரேய்மன் மலர்சாலையில் எம்பார்ம் பண்ணுவதற்காக வளர்த்தி இருந்தது.

எம்பார்ம் பண்ணுகின்றவர்கள் அறைக்குள் வருகின்றார்கள். சாராயம் குடித்து இருந்தார்கள், அது குடிக்காவிடின் அவர்களால் இந்த வேலையை செய்ய முடியாது. நானும் நண்பன் ரஜீசும் பிரேத அறைக்குள் நின்று கொண்டு இருந்தோம். நாமும் குடித்து இருந்தோம்.

எம்மை வெளியே போகச் சொல்லிக் கேட்கின்றார்கள்

அண்ணனின் உடலில் இருந்து வெளியேறிய பழுப்பு நிற புழுவொன்று என் கால் பெருவிரலில் தன் உடலின் முன் பக்கத்தினை உயர்த்தி பின் பக்கத்தினை நகர்த்தி ஏறிக் கொண்டது.

----------------

அண்ணா கானாமல் போன அந்த இரவில் அவனை இறுதியாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் அருகில் தான் கண்டேன். ரோட்டில் பெடியங்களுடன் நிற்கும் போது "கெதியன வீட்டை போ...அம்மா தேடுவா" என்று சொல்லிப் போட்டு வந்த பேருந்தில் ஏறி போய்விட்டான். நானும் இரண்டு மணி நேரம் கழித்து வீட்டை போய் பார்க்கும் போது அவன் வீட்டுக்கு வந்து இருக்கவில்லை.

"என்னை கெதியன வீட்டை போகச் சொல்லிவிட்டு ஆள் நல்லா ஊர் சுத்துறான்' என்று நினைத்து விட்டு அம்மாவிடமும் எதுவும் சொல்லாமல் படுக்கப் போய் விட்டேன். உண்மையில் அம்மாவிடம் சொல்லுவதற்கு எமக்கு எந்த வார்த்தைகளும் இருக்கவில்லை. அல்லது நெஞ்சுக்குள் அடை காத்துக் கொண்டு இருந்த வார்த்தைகள் நெருப்பாக பொழிந்து விடுமோ என்று பயத்தில் கொஞ்ச நாட்களாக அம்மாவிடம் எதுவும் கதைப்பதும் இல்லை.

அம்மாவும் எம்முடன் அதிகமாக கதைப்பதை நிறுத்தி விட்டார். அப்பா தனக்குள் அமுங்கி போய் பல வருடங்களாகி விட்டமையால் அவரும் யாருடனும் அதிகம் கதைப்பது இல்லை. ஊரில் இருக்கும் போது, பல வருடங்களுக்கு முன்னர் வெளியே போனவரை  ஆமி பிடிச்சு வைச்சு அடி அடியென அடிச்சு துவைச்சு போட்டு ஒரு உடுப்பும் இல்லாமல் ரோட்டில் போட்ட பின் அவர் தனக்குள் நொருங்கி கடும் அமைதியாக போய் விட்டார். அப்பர் அதுக்கு முதல் வெறுமேலுடன் கூட விறாந்தைக்கு வராதவர். கண்ணியம் உடுப்பிலும் இருக்க வேண்டும் என்று நினைச்சவர்.

அம்மாதான் பாவம், அப்பா நொருங்கிய பின் எம்மை தாங்கி நின்றவர்.  எங்கள் இருவரில் அண்ணாவையாவது முதலில் லண்டனில் இருக்கும் அண்ணரிடம் அனுப்பினால் அங்கு அவன் போய் என்னையும் கூப்பிட்டு விடுவான் என்ற நினைச்சு ஓடுப்பட்டு திரிந்தவர்.

-------------------------------------

வெளியில் நிற்கின்றோம்.

பிணவறைகளின் அருகே இருந்து வரும் நாற்றம் கொடியது. மூக்கினில் ஏறி மண்டையின் உச்சி வரைக்கும் போய் வாழ் நாள் முழுதும் நிலைத்து இருக்கும் நெடி அது. மணத்தினை விரட்டுவதற்காக ஒன்றன் பின் ஒன்றாக சிகரெட் குடித்துக் கொண்டு இருந்தோம்.

பெருவிரலில் ஏறிய புழு எங்கு போய் விட்டது என தெரியவில்லை. ஆனால் அது ஊரும் போது இருந்த வழுவழுப்பு  இன்னும் பெருவிரலில் ஊர்ந்து கொண்டே இருக்கு என்ற பிரமையைத் தந்தது.

அண்ணாவின் உடலை அணு அணுவாக புசித்து கொழுத்த புழு அது.

அண்ணாவை 30 நாட்களாக இதே பிணவறையில் தான் வைத்து இருந்து இருக்கின்றார்கள். அவனை காணவில்லை என்று தேடத் தொடங்கி இரண்டாம் நாளே கொழும்பாஸ்பத்திரியின் இதே பிணவறைகளில் வந்து தேடியிருக்கின்றேன். இன்று காலை அவன் உடலை எடுத்து வெளியே காட்டிய அதே லாச்சியை (பிணங்களை வைத்திருக்கும் லாச்சி) திறந்தும் பார்த்து இருக்கின்றேன்.

அண்ணா போட்டு இருந்த வெளிர் நீல ஷேர்ட்டுடனும் கருப்பு டெனிமுடனும் முகத்தின் கீழ் பகுதி இரண்டாக பிளந்து இருந்த ஒரு உடலையும் கண்டும் இருந்தன்.

---------------------------------------------

இரண்டு தடவைகள் அண்ணா லண்டனுக்கு வெளிக்கிட்டு இடையில் பிழைத்துப் போய் மீண்டும் இலங்கைக்கே திரும்பி வந்து இருந்தான். இரண்டு தரமும் கூட்டிக் கொண்டு போன கணேசன் அண்ணா இடையில் ஏமாற்றிப் போட்டார் என்று பிறகு தான் தெரிந்தது.
இரண்டாம் தரமும் பிழைச்சுப் போன நாளில் அம்மா பெரிய குரல் எடுத்து கத்தி அழுதுகொண்டு இருந்தவர். அப்பா வழக்கம் போல மெளனமாக இருந்து கொண்டு இருந்தார். கண்களின் ஓரப் பகுதியில் ஈரமாக இருந்த மாதிரி எனக்கு இருந்தது. ஆனால் சரியாக தெரியவில்லை. பிறகு அப்பா எழும்பிப் போய் கோப்பையை எடுத்து இரவுச் சாப்பாட்டை போடப் போகும் போது அம்மா பொறுக்க முடியாமல் 'சனியனே நான் ஒருத்தி கிடந்து அழுது குளறுறன் .. ஒரு கவலையும் இல்லாமல் சாப்பிடப் போறியா நாயே" என்று பேசி கோப்பையை தட்டி விட்டார்.

அதுக்குப் பிறகு அப்பா இரவில் சாப்பிடுவதும் இல்லை, பசிக்குது என்று கேட்பதும் இல்லை. அம்மா போட்டு வைச்சால் சாப்பிடுவார் இல்லாட்டி பேசாமல் படுத்து விடுவார். நானோ அண்ணாவோ சாப்பிடுங்கோ என்று எவ்வளவு கெஞ்சினாலும், இல்லை சாப்பாட்டை போட்டுக் கொடுத்தாலும் சாப்பிட மாட்டார்.

சில இரவுகளில் அவர் வயிறு அழும் சத்தம் மெதுவாகக் கேட்கும். அதைக் கேட்ட பிறகு எனக்கு நித்திரை வராது.

-----------------

எம்பார்ம் பண்ணி முடிச்சாச்சு என்று சொன்னார்கள்.

எங்களை உள்ளே பார்க்க விடவில்லை. நாங்களும் போக விரும்பவில்லை.

மனம் மிகவும் வெறுமையாக இருந்தது. பெருவிரலில் அந்தப் புழு ஊர்வது போன்று இருக்க இடைக்கிடை காலை பலமாக உதறி விட்டுக் கொண்டு இருந்தன்.

----------------------------

அண்ணா காணாமல் போய் விட்ட நாட்களில் கொழும்பில் இருக்கக் கூடிய பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள், ஈபிடிபி முகாம்கள் என்று எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டு இருந்தன். அப்பா என்னுடன் எல்லா இடங்களுக்கும் வந்தாலும் ஒரு வார்த்தை கூட கதைக்க மாட்டார். யாரோ தனக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை தேடுகின்றேன் என்ற மாதிரி முகத்தை வைத்து இருப்பார்.

இடையில் ஒரு இரவு அண்ணாவை எங்கும் காணவில்லையே என்று நான் மெதுவாக அழும் போது கிட்ட வந்து தலையை தடவி விட்டார். கூர்ந்து பார்த்தேன் அவர் கண்களில் சலனம் இருக்கவில்லை. என்ன நடந்து இருக்கும் என்று அப்பாவுக்கு தெரிந்து இருக்குமோ என்று அவர் முகத்தைப் பார்க்கும் போது லேசாக சந்தேகம் வந்தது.

அம்மா அண்ணாவை தேடும் இடங்களுக்கு வரவில்லை. எப்பவும் கண்ணீர் விட்டுக் கொண்டு ஒரு மூலைக்குள் முடங்கியிருந்தார். மனசால் மிகவும் அடிபட்டு போயிருந்தார்.

---------------------------------------

அண்ணாவை மீண்டும் லண்டனுக்கு அனுப்ப மூன்றாவது தடவையாக முயன்று கொண்டு இருந்தார் அம்மா. லண்டனில் இருக்கும் மாமாவோ, இது தான் கடைசி தரம் இனி தன்னால ஒரு சதமும் தர முடியாது என்று சொல்லிப் போட்டார். அவர்தான் பாவம் முதல் இரண்டு தரமும் காசு அனுப்பினது.

இந்த முறை ஏஜென்சி வேலை செய்கின்ற ரவிந்திரன் நல்ல கெட்டிக் காரன் என்று சொல்லிச்சினம். வீட்டை வரும் போதெல்லாம் சிரிச்சு சிரிச்சு கதைப்பார். அப்பாவுக்கு வருத்தம் வந்த பிறகு அம்மா சிரிச்சது அவர் சொன்ன கதைகளைக் கேட்டுத்தான். அம்மா சின்ன வயதிலேயே கலியாணம் முடிச்சவர். அப்பா தனக்குள் அமுங்கிப் போகும் போது தன் முப்பதின் ஆரம்பத்தில் இருந்தவர். இப்ப தான் கன நாட்களுக்கு பிறகு சிரிக்கின்றார்,

கொஞ்ச நாட்களாக அப்பா மத்தியான நேரங்களில் வீட்டை இருக்காமல் வெளியே போய்விடுவார். அண்ணா கம்யூட்டர் கிளாசுக்கு போனார் என்றால் பின்னேரம் தான் வருவார். நான் ஏ லெவல் செய்கின்றபடியால ஒரே கிளாஸ் கிளாஸ் என்று போய்விடுவன்.

மூன்று நாட்களுக்கு முதல் மத்தியானம் அண்ணா வீட்டை வந்து உள்ளே போன போது அம்மா நிறைய சிரிச்சுக் கொண்டு இருந்து இருக்கின்றார்,

அதுக்கு பிறகு அண்ணா அம்மாவுடன் கதைப்பது இல்லை.

நாலாம் நாளில் இருந்து அவனைக் காணவில்லை.

----------------------------------------------------------------------

மீண்டும் காலை உதறி விடுகின்றேன்.

திரும்பத் திரும்ப புழு ஊருகின்றமாதிரியே இருக்கு.

அண்ணாவின் உடம்பை அவர் காணாமல் போய் இரண்டாம் நாளே பிணவறைக்குள் கண்டு இருந்தன். ஆனால் என் புத்தி அதனை ஏனோ அண்ணாவென்று ஏற்கவில்லை. முகம் நெற்றியின் கீழ் சிதைந்து இருந்ததால் அவனை மாதிரி இருக்கு என்று மனம் சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியும் உயிருடன்  வருவான் என்று நினைச்சு இந்த 28 நாளும் ஒவ்வொரு கணமுமாக தேடியிருக்கின்றன்.

என் அண்ணா, எனக்கே எனக்கான அண்ணா. உயிரும் உணர்வுமான அண்ணா.

செத்தே போயிருந்தான்.

நேற்று மீண்டும் வெள்ளவத்தை பொலிசுக்கு போய் விவரம் ஏதும் தெரிந்ததா என்று கேட்கும் போதுதான் ஒரு மாசத்துக்கு முதல் இரவு ரயிலில் ஒருவர் மோதுண்டு செத்தவர் என்றும் அவரது உடைந்து போன மணிக்கூடு இது தான் என்றும் காட்டிய போதுதான் என் புத்தி அந்த உடம்பு அண்ணாவினது என்று உணர்த்தியது.

உடம்பை அடுத்த நாளே எரிக்கச் சொல்லியிருந்தார்கள். அவசர அவசரமாக இறுதிக் கிரியைகள் எல்லாம் செய்தோம்.

அம்மா ஒவ்வொரு அரை மணித்தியாலத்துக்கும் ஒரு முறை மயங்கி மயங்கி விழுந்து கொண்டு இருந்தார். அழக்கூட பலம் இருக்கவில்லை.

அப்பா நிலை குத்தின விழிகளுடன் தேவாரம் பாடிக் கொண்டு இருந்தார்.

------------------

நான் இப்ப லண்டன் வந்து விட்டேன்.

அண்ணா வர இருந்த லண்டன் எனக்கு மட்டும் வாய்த்தது.

இங்கு வந்த பிறகும் கூட காலை அடிக்கடி உதறி விட்டுக் கொண்டே இருந்தன். இன்னும் பெரு விரலில் உயிர்ப்பாக அந்த புழுவின் ஊரல் இருந்தது.

பிறகு ஒரு நாள் மத்தியானம் தொலைபேசி அழைத்தது

மறுமுனையில் இருந்தவர்  அம்மா ஊரில் தவறிவிட்டதாகச் சொன்னார்.

என் கால் பெருவிரலில் இருந்து ஒரு புழு கீழே இறங்கிச் சென்றது.

அண்ணாவை புசித்த புழு.

---------------------------------------------

மார்ச் 18, 2014

தகிக்கும் தீயடி நீ - சிறுகதை


அவளை நீங்கள் ஒரு புத்தகக் கண்காட்சிலோ அல்லது ஒரு ரயில் பயணத்திலோ கண்டிருந்தால் அந்த நிமிடமே "என்னைக் கல்யாணம் செய்வாயா" என்று கேட்டு இருந்து இருப்பீர்கள்.
அல்லது கோவில் ஒன்றின் கர்ப்பக் கிரகத்தில்  கண்டிருந்தால் அன்றே மொட்டை அடித்து இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டி அனுதினமும் ஆராதிக்கும் ஒரு பக்தனாகவே மாறியிருப்பீர்கள்
அல்லது ஒரு சிறு சந்தியில் கடந்து போகும் இன்னொரு வாகனத்தில் அவளைக் கண்டு இருந்திருந்தாள் அவள் வீடு எங்கு என்று தேடியே பித்துப் பிடித்து அலைந்து இருப்பீர்கள்.
ஆனால் நான் அவளைக் கண்டது இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அல்ல.  மிகவும் குறுகிய சந்தொன்றின் இடது பக்கம் இருந்த ஒரு சிறு அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஆறாம் மாடியில் அமைந்து இருந்த 609 இலக்க குடியிருப்பு (அபார்ட்மென்ட்) தான் அவளை முதன் முதலில் காண்கின்றேன்.

வீட்டின் முன் அறை முழுதும் சாம்பிராணிப் புகை சூழ்ந்து இருக்கின்றது. அறைக்குள்  இருந்த குத்து விளக்கில் இருந்து வந்த தேங்காய் எண்ணெயின் வாசமும் சாம்பிராணிப் வாசத்துடன் கலந்து வீசுகின்றது. சிவரில் அம்பாளும், குருவாயூரப்பனும் தொங்கிக் கொண்டு இருக்கின்றனர். மூலையில் யேசு நாதர் அமைதியாக காட்சியளிக்கின்றார். வீடே ஒரு வகையான பக்தி மயமாக காட்சியளிக்கின்றது.

எனக்கு முன் நின்று கொண்டு இருந்த மூன்று வேறு பெண்களுடன் அவளும் நின்று கொண்டு இருக்கின்றாள். நாங்கள் இரண்டு பேராகச் போயிருக்கின்றோம். இரண்டு பேர் மூன்றில் இருவரை தெரிந்தெடுக்க வேண்டும். என்னுடன் வந்த என் நண்பன் லதன் ஏற்கனே அவர்களுக்கு மிகவும் அறிமுகமானவன். இன்று தான் என்னை இங்கு கூட்டிக் கொண்டு வருகின்றான். "உன் ரசனைக்கும் விருப்பங்களுக்கும்' இவை தான் சரியானவை என்று சொல்லித்தான் அழைத்து வந்திருக்கின்றான்.

மூன்று பெண்களில் ஓரமாக அவள் நிற்கின்றாள். முதல் இரண்டு பேரையும் நிமிர்ந்து பார்த்த பின் மூன்றாவதாக நின்ற இவளை நிமிர்ந்து பார்க்கின்றேன். மயில் பச்சை நிற மேலாடையில் சந்தன நிற பட்டுத் தாவணியும், அதே நிறத்தில் பாவாடையையும் உடுத்திக் கொண்டு நீண்ட கூந்தலில் மல்லிகைப் பூவையும் சூடிக் கொண்டு நின்று கொண்டு இருக்கின்றாள். மல்லிகையா அல்லது அதே போன்ற ஒரு பூவா என்று தெரியவில்லை. அவளைப் பார்த்த அந்த வினாடியே பல யுகங்களுக்கு முன் தொலைத்த ஏதோ ஒன்றை மீண்டும் கண்டுவிட்டதாக மனம் குதிக்கின்ற ஆரம்பிக்கின்றது.

குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குறும்புச் சிரிப்பும் பவளம் போல் மேனியும் பால்நிற பற்களும் கருமை நிற கேசமும், அதில் புரளும் மலர்களும் என்று இவளைப் போல் இது வரை பலரை பார்க்கினும் இன்று போல் என்றும் என் மனம் ஒரு வினாடியில் விக்கித்து நின்றது இல்லை. சாந்தமான கண்களுடன் கனிவாகப் பார்க்கின்றாள்.  கண்களின் வழியூடாகவே உயிரை அனுப்புகின்றாள். உடலில் ஆறாக ஓடிக்கொண்டு இருந்த என் சுயம்  ஒரு வினாடியில் ஆவியாகி போகின்றது. பாரமற்ற ஒரு சிறு பறவையின் இறகைப்போல நான் ஆகிக்கொண்டு இருக்கின்றேன். ஒரு பெண் இந்தளவுக்கு அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்க முடியுமா?..

அங்கிருக்கும் 50 வயது மதிக்கத்தக்க நெற்றியில் குங்குமப் பொட்டும், திருநீரும் பூசி கண்களில் சலனமும் இன்றி இருந்த பெண்ணிடம் "இவளை பிடித்து இருக்கின்றது" என்கின்றேன்.

"ப்ரியா அவருடே போக்கு" என்றுவிட்டு மேலும் இரண்டு மூன்று வசனங்கள் மலையாளத்தில் சொல்லி அந்த வீட்டின் உள்ளே இருக்கும் நான்கு அறைகளில் ஒன்றுக்குள் என்னை அவளுடன்  அனுப்புகின்றார் அந்தப் பெண்மணி.

அறைக்குள் மெதுவாக நான் நுழைகின்றேன். இது எனக்கு முதல் தடவை அல்ல. இதுவே இறுதித் தடவையாகவும் இருக்கப் போவதில்லை. ஆனால் மனம் மிகவும் படபடக்கின்றது. கால் பாதங்கள் வியர்க்கின்றன. எனக்குத் தெரிந்த மொழிகளில் உள்ள எல்லா வார்த்தைகளும் ஒரு வினாடியில் மறந்து விட்டதாக உணர்கின்றேன். அங்கிருக்கும் கட்டிலில் நிலை கொள்ளாமல் அமர்கின்றேன். ஒரு கிளாஸ் சிவாஸ் ரீகலாவது அடித்து விட்டு வந்து இருக்கலாமோ என்று ஒரு வினாடி மனம் எண்ணுகின்றது.

கதவினைச் இறுக்கிச் சாத்தியவள், ஒரு சில நிமிடங்கள் என்னையே பார்த்துக் கொண்டு நின்று விட்டு மனசில் இருந்து வரும் புன்னகையுடன் என் அருகே ஒரு சிறு இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டு தெளிவான தமிழில் "ஏன் என்னை அப்படியே விழுங்கிற மாதிரி பார்க்கின்றீர்கள்" என்று கேட்டு விட்டு கல கலவெனச் சிரிக்கின்றாள். மனதில் கோயில் பூசை நேரத்தில் ஒரு சேர அடிக்கும் மணிகளின் ஒருமித்த இசைபோல அவள் சிரிப்பு கேட்கின்றது.

நான் எதுவும் கதைக்காமல் இருப்பதைக் கண்டு, 'உடுப்புகளை கழட்டவா" எனக் கேட்கின்றாள். அவள் கண்களில் இருந்த சாந்தம் கிறக்கமாக மாறத் தொடங்குகின்றது. உள்ளுக்குள் எங்கோ தொலைந்து கொண்டு இருந்த நான் அவள் கேட்டதை சரிவரப் புரிந்து கொள்ள முன்னமே "வேண்டாம் வேண்டாம், I am not still ready" என்கின்றேன்.

விழுங்குவதற்கு எச்சில் கூட எனக்குள் இருக்கவில்லை.

கூர்மையாகப் பார்த்துக் கொண்டு இருந்தவள், "சரி கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டு இருப்பம்" என்கின்றாள்.  கொஞ்சம் கொஞ்சமாக என் நிலைக்கு நான் வரத் தொடங்குகின்றேன். மனம் சாந்தம் கொள்ள ஆரம்பிக்கின்றது. பல காலமாக அமைதியிழந்து கொண்டு வந்து கொண்டிருந்த மனம் அவள் அருகாமையில் மெது மெதுவாக அமைதியுறுகின்றது.

மிக வேகமான, எதுக்கெடுத்தாலும் பணம் என்ற வாழ்க்கை முறை நிரம்பிய டுபாயில் இப்படி நிதானமாக கதைத்து அளவுறாவி ஆறுதலாக அணுகும் முறை இல்லவே இல்லை. செலவழிக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் ஏற்ப கட்டணம் அறவிடும் இவர்களின் தொழிலில் இப்படியான ஒருவரையோ அல்லது ஒரு விடுதியையோ பார்ப்பது இயலாத காரியம். ஆனால் இவள் முற்றிலும் மாறுபட்டு இருந்தாள், இவள் மட்டுமல்ல அந்த விடுதியே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. வருகின்றவர்களின் பணத்தின் மீதுதான் கரிசனை என்ற போக்கு அங்கு இல்லாதது ஆச்சரியமாகவும் மனசுக்கு நிம்மதியாகவும் இருக்கின்றது.

எனக்கு அவள் பலவிதங்களில் வேறுபட்டு தெரிகின்றாள். பக்கத்து வீட்டு பெண்ணை பார்ப்பது போன்ற ஒரு தோற்றம். பல நாட்கள் பழகியது போன்ற ஒரு சிநேகிதம். என் விருப்பங்களுக்கு மட்டுமன்றி தன் விருப்புகளையும் நிறைவேற்றிக் கொள்ள முனையும் சாதுரியம். என் விருப்புகளை நிறைவேற்ற துடிக்கும் லாவகம், தனக்கு பிடிக்காத சில செயல்பாடுகளைத் தவிர்க்கச் சொல்லி கேட்கும் போது இருக்கும் அதிகாரம். போன்றவற்றால் அவள் எனக்குள் அன்றே முழுவதுமாக நிரம்பிக் கொள்கின்றாள்.

அதன் பின் அடிக்கடி அங்கு செல்லத் தொடங்குகின்றேன்.

ஒவ்வொரு முறையும் செல்ல செல்ல எமக்கிடையிலான நெருக்கமும் அதிகரிக்கின்றது. ஒரு முறை செல்லும் போது அவளிடம் கேட்கின்றேன்

"ஏன் இந்த தொழிலை செய்ய வேண்டி வந்தது"

அவர்களைப் பார்த்து அவர்களிடம் செல்பவர்கள் கேட்கும் மிகவும் அபத்தமான ஒரு கேள்வி என்றால் இதுதான். ஆனாலும் கேட்கின்றேன். வழக்கமான பதில் தான் வரும் என்று நினைக்கின்றேன்.

ஆனால், அவள் கூறுகின்றாள்

"எனக்கு இது பிடிச்சு இருக்கு. அதனால் செய்கின்றேன்".

" இங்கு இந்த வேலை செய்ய வேண்டி வரும் என்று தெரிந்தா வந்தாய்"

"தெரியும், வரும் போதே இந்த வேலைதான் என்று தெரியும். ஆனால் வீட்டு வேலைக்கு வருவதாக பொய் சொல்லித்தான் வீசா பெற்றேன்" என்கின்றாள். வழக்கமான புன்னகையும் தெளிவான பார்வையும் இதனைச் சொல்லும் போதும் அவளிடம் தெரிகின்றது.

அவள் எப்பவும் இப்படித்தான் பதில் சொல்கின்றாள். தன்னிடம் வரும் ஆணிடம் ஒரு துளி அனுதாபத்தினைச் சம்பாதித்தாலே போதும் இன்னும் அதிகமாக பணம் பெறலாம் என்ற போக்கும் அவளிடம் இல்லை.
அவள் தன் வேலையை மிகவும் லயித்துச் செய்கின்றாள். அவளால் மனதளவில் ஒன்றுபட முடியாதவர்களை அடுத்த முறை வரும்போது ஏதாவது சொல்லி தவிர்த்துக் கொள்கின்றாள். பிடித்து விட்டால் அவர்களுடன் தன் முழு ஈடுபாட்டினையும் காட்டி வசீகரிக்கின்றாள்.

மேலும் மேலும் அடிக்கடி அங்கு செல்கின்றேன்.

அவளை காணச் செல்லும் சில நாட்களில் வேறு எவரையும் அனுமதிக்காமல் என் வரவைப் பார்த்துக் கொண்டு இருப்பாள்.  இன்னும் சில நாட்களில் அவள் இன்னொரு வாடிக்கையாளருடன் இருப்பாள். அவருடன் முடித்து விட்டு தலை முழுகி விட்டு வரும் வரைக்கும் நான் அவளுக்காக காத்திருப்பேன்.

அவளைப் பார்க்க எனக்கு சில நேரங்களில் பொறாமை வருவதையும் தவிர்க்க முடியவில்லை. தன் வேலையை மிகவும் ரசித்துச் செய்கின்றாள் என்பதை அவள் செயல்களே உணர்த்தி விடும். அவளுக்கும் மிகவும் பிடித்த ஒருவனாக மாறி விடுகின்றேன். அநேகமாக தன்னைப் பற்றி அனைத்தையும் கூறுகின்றாள். அவள் கேரளாவில் உயர் கல்வி படித்து MA பட்டம் பெற்றவள் என்பதும், அங்கு சிறிது காலம் நல்ல வேலையில் இருந்து இருக்கின்றாள் என்பதையும் அறிகின்றேன். அவளுக்கு தம்பியும் ஒரு அக்காவும் கேரளாவில் இருக்கின்றார்கள். உழைக்கும் பணத்தில் அரைவாசியை  அங்கு அனுப்பி விட்டு மிச்சத்தினை இங்கே செலவழிக்கின்றாள்.

பல தடவைகள் அவளிடம் போய் வெறுமனே கதைத்து விட்டு வந்திருக்கின்றேன். பின் பல தடவைகள் அவளை வெளியே அழைத்துச் சென்று இறுக்கி அணைத்தவாறு சினிமா பார்த்து இருக்கின்றேன். சில தடவைகள் அவளை நிர்வாணமாக்கி விட்டு புத்தர் சிலைக்கு முன் மண்டியிட்டு இருக்கும் ஒரு பிட்சு போல அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்து இருக்கின்றேன்.  சில இரவுகள் என் அபார்ட்மென்ட் இற்கே வந்து என்னுடன் தங்கி அடுத்த நாள் சென்றிருக்கின்றாள். ஒரு வார இறுதியில் வந்து கேரள முறைப்படி மீனும் சோறும் சமைத்து தந்து வார இறுதி முடியும் நாளில் போயிருக்கின்றாள்.

இப்படி ஒரு பெண்ணிடமே தொடர்ந்து போவது தேவையற்ற உணர்ச்சிகளுக்கு (Emotions) இடம் கொடுக்கும் என்று என் நண்பர்கள் சொல்வதையும் நான் கேட்பதாக இல்லை. "கடைசியில் நீ அவளை கலியாணம்தான் கட்டப் போகின்றாய்" என்று நண்பர்கள் சொல்லிப் பார்கின்றார்கள்.

இவ் விடயத்தில் நாம் இருவரும் தெளிவாக இருக்கின்றோம். ஆளை ஆள் எவ்வளவு நெருங்கிக் சென்றாலும் இணைய முடியாது என்று அறிந்து கொண்டுள்ளோம். இருவருக்கும் இடையில் நெருக்கம் இருப்பது போன்றே விரிசல்களும் இருப்பதை ஏற்கின்றோம். எல்லாவற்றையும்  சமூகம் என்னைப் பற்றி வைத்திருக்கும் பிம்பத்தினை இழக்க  தயாரில்லை என்பதையும் நான் அறிந்து வைத்து இருக்கின்றேன், அவளும் இதனை அறிந்து வைத்திருக்கின்றாள்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு நாள் எனக்கு மீண்டும் ஊருக்கு போக வேண்டிய அவசியம் வருகின்றது. ஊரில் என் பெயரில் வாங்கி வைத்து இருந்த ஒரு நிலம் தொடர்பாக ஒரு பிரச்சனை. அவளிடம் சொல்லி விட்டு ஊருக்கு கிளம்புகின்றேன்.

பதினைந்து நாட்கள் சென்றிருக்கும், மீண்டும் டுபாய் வருகின்றேன்.

வந்த அடுத்த நாள் அவளிற்கு பல முறை தொலைபேசி எடுக்க முயற்சித்தும் அவளது தொலைபேசி துண்டிக்கப்பட்டு இருந்தமையால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பொதுவாக இவர்கள் அடிக்கடி இலக்கத்தினை மாற்றுவார்கள் என்பதால் அது பற்றி பெரியளவில் கவலைப்படவில்லை. பின் அடுத்த நாள் அவளின் விடுதிக்கு சென்று கதவினைத் தட்டுகின்றேன். ஒரு சீக்கியர் வந்து கதவினைத் திறக்கின்றார்,  அவர் முகத்தினைப் பார்த்தவுடன் புரிந்து போகின்றது, பலர் வந்து கதவைத் தட்டி அவர்களைத் தேடியிருக்கின்றார்கள் என்று. அவர் மொழியில் ஏதோ கத்தி சொல்கின்றார். இது ஒரு Family unit என்று சொல்வது மட்டும் புரிந்தது.

எங்கு போயிருப்பாள்?

பொதுவாக இவர்கள் எப்படித்தான் வெளியிற்கு தம்மை ஒரு குடும்பம் போன்று காட்டிக் கொண்டாலும் அக்கம் பக்கம் இருப்பவர்கள், அடிக்கடி ஆண்கள் வந்து போகின்றதை வைத்து ஒரு மூன்று நான்கு மாதங்களில் கண்டு பிடித்து கட்டிட உரிமையாளருக்கு ஆக்கினை கொடுத்து எழும்பச் சொல்லிவிடுவார்கள். முதல் ஒருக்காவும் இப்படி நடந்து இரண்டு நாட்களின் பின் அவளே தொலைபேசி எடுத்து தன் புதிய இலக்கத்தினையும் முகவரியையும் தந்து இருந்திருந்தாள்.

இம் முறையும் அப்படித்தான் என்று நினைத்து அவள் தொலைபேசி அழைப்புக்காக காத்து இருக்கின்றேன்,

இரண்டு நாட்கள் போய் விட்டன. அவள் அழைக்கவில்லை

பத்து நாட்கள் போய் விட்டன. அவள் அழைக்கவில்லை

ஒரு மாதம் போய்விட்டது; அவள் அழைக்கவில்லை

ஒரு வருடமே ஓடிப் போயிட்டு - அவள் அழைக்கவேயில்லை,

ஒரு வேளை பொலிஸ் அவர்களைப் பிடித்து ஊருக்கு வலுக் கட்டாயமாக அனுப்பி வைத்து இருக்குமோ. அல்லது சிறையில் தள்ளி இருக்குமோ ("ஐயோ என் நம்பரை தன் அலைபேசியில் இருந்து அழித்து இருப்பாளோ"), அல்லது ஏதாவது விபத்தில் சிக்கியிருப்பாளோ,

எங்கே போயிருப்பாள்... ஒரு முறை கூட தொலைபேசியில் அழைக்க முடியாதளவுக்கு என்ன நடந்து இருக்கும்? உயிரோடுதான் இருக்கின்றாளா....?

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

அடுத்த வருடம் நான் எல்லா பொருத்தங்களும் பார்த்து, ஒன்றுக்கு பல தடவைகள் குடும்பம் கோத்திரம் சாதி எல்லாம் விசாரித்து ஒரு சுப முகூர்த்தத்தில் ஊரில் இருக்கும், என்னை விட 9 வயது குறைந்த ஒரு பெண்ணை,  திருமணம் முடிக்கின்றேன்.

ஆனாலும் இடையிடையே அவள் பற்றிய நினைவும் அவள் வரும் கனவுகளும் வருவதை தவிர்க்க முடியவில்லை.

ஒரு முறை மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் போது அவள் பெயரை தவறுதலாக உளறி வசமாக  மாட்டிக் கொண்டு பின் ஒருவாறு சமாளித்து மயிரிழையில் தப்பியிருக்கின்றன். (ஆனாலும் ஒரு டவுட்டுடன் தான் மனைவி அதனை நம்பினார். )

வேலையில் உயர் பதவிகளும் தேடி வருகின்றது. தென் அமெரிக்காவுக்கு சென்று ஐந்து வருடம் வேலை பார்க்க வேண்டி வருகின்றது.  ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றது.

பின் ஒரு நாளில் அலுவலக வேலை காரணமாக தென் அமெரிக்காவில் இருந்து ஓமான் செல்ல வேண்டி வருகின்றது.

ஒமானில் வேலைகளை முடித்து கொண்டு மீண்டும் தென் அமெரிக்கா செல்வதற்காக விமான நிலையம் வந்து டிக்கெட், வீசா எல்லாம் காட்டி விட்டு விமானம் புறப்பட நேரம் இருப்பதால் உள்ளே விடுப்பு பார்க்க நடக்கத் தொடங்குகின்றேன்.

என் பின்னால் ஒருவர் ஓடி வந்து என் தோளைத் தொடுகின்றார். பழக்கமான குளிர்ச்சி நிறைந்த கைகளால் தொடப்படுகின்றேன்

மனதில் ஒரு நரம்பு அதிரத் திரும்பிப் பார்க்கின்றேன்.

அவள் நின்று கொண்டு இருக்கின்றாள். அவளே தான் நின்று கொண்டு இருக்கின்றாள்.

அதே பொலிவுடனும், அதே சிரிப்புடனும் அதே குதூகலத்துடனும், அதே குறும்புடனும் அவள் நின்று கொண்டு இருக்கின்றாள். கொஞ்சம் உடம்பு வைத்திருக்கின்ற மாதிரி இருக்கு. வயிறு இலேசாக ஊதி இருக்கின்ற மாதிரியும் இருக்கு.

"நீயாக இருக்குமோ என்று நினைச்சு ஓடி வந்தன்" என்று மூச்சிரைக்கச் சொல்கின்றாள்.

பின் கையை பிடிச்சுக் கொண்டு தர தரவென்று அங்கிருக்கும் ஒரு சிறு உணவு விடுதிக்கு கூட்டிக் கொண்டு சென்று ஒரு இளைஞனை அறிமுகப்படுத்துகின்றாள்.

"இவர் என் கணவன்" என்று சொல்லி அறிமுகப்படுத்துகின்றாள்.

நான் அவனுக்கு கைலாகு கொடுக்கின்றேன். என் பிள்ளை என்று ஒரு ஆண் குழந்தையைக் காட்டுகின்றாள். அத்துடன் தான் இப்ப திருப்பி மாசமாக இருக்கின்றேன் என்கின்றாள்.

நிறையக் கதைக்கின்றாள், என்னனென்னவோ எல்லாம் சொல்கின்றாள். அவளது கணவனது கடை தான் அது. ஒரு விமான நிலையத்தில் கடை போட்டு வசதியாக இருக்கின்றார்கள் என்று புரிகின்றது.

எனக்கு  நேரமாகின்றது. நான் போகும் விமானத்திற்கான பயணிகள் அழைப்பு அரபு மொழியிலும் ஆங்கிலத்திலுமாக வருகின்றது.

அருகில் இருக்கும் ஒரு சிறு அங்காடிக் கடையில் அவளது ஆண் குழந்தைக்கு நிறைய இனிப்புகளும் ஒரு விளையாடு பொம்மையும் வாங்கி கொடுத்து விட்டு விலகி நடக்கின்றேன்.

இடையில் திரும்பி பார்க்கின்றேன். நான் போவதையே பார்த்துக் கொண்டு நிற்கின்றாளா என பார்க்கின்றேன். அவள் தன் உணவு விடுதியில் மும்முரமாக இருக்கின்றாள். இந்த வேலையையும் லயித்துச் செய்கின்றாள் போலும். ஆனாலும் என்னை பார்த்துக் கொண்டு நிற்கவில்லை என்பது கொஞ்சம் கவலையை தந்தது என்பது உண்மைதான்.

பின் இரண்டு முறை ஓமான் போக வேண்டி வந்தது.

ஏன் என்று தெரியவில்லை அவளை மீண்டும் காணக் கூடிய சந்தர்ப்பத்தினை தவிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு சென்று திரும்பி இருந்தேன்.

ஒரு வேளை அவள் இறந்து இருக்கலாம் என்று வசதியாக நினைச்ச என் மனம் அவள் கலியாணம் கட்டி குழந்தை குட்டிகளுடன் என்னைப் போலவே நிம்மதியாக இருப்பதை விரும்பவில்லை போலும்.

---------------------------------
மார்ச், 27 2014

மரணத்தில் தொடங்கும் காலை

எனது காலை மரணம்
பற்றிய செய்திகளில்
விடிகின்றது
நாள் முழுதும்
அவலத்தின் கூக்குரல்

எனது கண்களை
ஆயிரம் கைகளால்
பொத்தி விடுங்கள்
என் காதுகளை
அறுப்பதற்காய்
வாட்களை கொண்டு வாருங்கள்
என்னை நான் ஒளிப்பதற்கு
பாதாளங்களை
திறந்து விடுங்கள்

இறந்த குழந்தையின்
தலையை வருடி விடுகின்றாள் தாய்
சிதைந்த மகனின் உடலை
அள்ளி கொள்கின்றான் தந்தை
நொடியில் அழிந்து போன
தன் அம்மாவின்
கைகளை பற்றிக் கொள்கின்றான்
ஒரு சிறுவன்

வேண்டாம்
இவை எதையும் எனக்கு
இனி சொல்லாதீர்கள்

ஒற்றைச் கையில்
தாயின் கபாலம் ஏந்தி
ஒரு குழந்தை
கனவில் வருகின்றது
என் கோப்பையில்
போடும் உணவில்
பிஞ்சு ஒன்றின்
இரத்தம் கசிகின்றது

வெட்ட வெளியில்
தூரத்தே தெரிகின்ற
ஒரு புள்ளியிலும்
சவ ஊர்வலத்தினை
காணுகின்றேன்
பாடையை கூட பிணங்கள்
தான் காவுகின்றன

படுக்க போன பின்
தலை மாட்டில்
இருந்து மூன்று பிள்ளைகளை
இழந்த அப்பன் ஒருவன்
சத்தமின்றி அழுகின்றான்

மீண்டும் சொல்கின்றேன்
இனி நான்
இவற்றை கேட்கப்
போவது இல்லை

சத்தம் வரும்
எல்லா திசைகளையும்
நான் அடைத்து விட்டேன்
கண் பார்க்கும் எல்லா
உருவங்களிலும்
இருளை சாத்தி விட்டேன்
ஒரு சிறு
செய்தியைத் தானும் நான்
கேட்க போவதில்லை

யுகங்களின் பின்
ஊழி முடிய தேவன்
வருவானாம்
அண்ட சராசங்களின்
வல்லமை கொண்டு
அவன் வருகையில்
மரித்து போன எம்
பிள்ளைகள் அனைத்தும்
எழுந்து கொள்வார்களாம்

அது வரை காத்திருக்கின்றேன்
இறுக்கி வைத்த மூச்சை
யுகங்களின் பின்னே
மீண்டும் விட காத்திருக்கின்றேன்

-நிழலி-

(22-January-2009 10:11 PM)

Thursday, October 23, 2014

சொல் அப்பா சொல்

வெள்ளை பனி உருகி
வீட்டின் முன் வழிகின்றது
வளைந்து செல்லும் வீதியெங்கும்
பனியின் சிதறல்கள்
காற்றின் திசையெங்கும்
குளிரின் வாசம்

பனி பார்க்க விரும்பும்
மகனை கூட்டிச்
சென்று காட்டுகிறேன்
குவியலாக இருக்கும்
பனிக்குள் குளித்தெழும்புகிறான்
சறுக்கி வீழ்ந்து சிரித்து
எழும்புகிறான்
வெண் நுரை அள்ளி
வீசி விளையாடுகிறான்

இப்படித் தானே அப்பா நீயும்

ஊர் முழுதும் மழை
நிரம்புகையில்
சைக்கிளில் என்னை வைத்து
வெள்ளம் காட்டுவதும்
மழையில் நனைவதின் சுகமும்
வெள்ளத்தை கூறு கிழித்து
சைக்கிள் ஓட்டுவதன்
பரவசமும் அப்பா
நீ காட்டியது தானே
எனக்கும்

பின்பு
பனை வெளிகளினூடு போகையிலும்
மலைக் குன்றுகளினூடு நடக்கையிலும்
நீர் வெளிகள் தோறும் கூட்டிச் செல்கையிலும்
உன் விரல்களுடன் என்
விரல்களை இறுக
பிணைந்து கொள்வாய்
யமனால் கூட
பிரிக்க முடியாது நம்
விரல்களை

ஆயினும் அப்பா
என்று உன் விரல்களை
நான் பிரித்தெடுத்தேன்?

என்னையும் உன்னைபோல் ஆணாக
புரியும் போதா
உன் விரல்களை
நான் பிரித்தேன்?
அல்லது
அப்பாக்களுக்கும்
மகன்களுக்குமான
பெரும் இடை வெளியிலா
உன்னை தொலைத்தேன்

உன்னில் இருந்து என்னை
பிரிக்கையில்
உன் விரல்களின் நோவை
நான் அறியவில்லை
உன் மனதின் ஓரத்தில்
இருந்த கண்ணீரின் துளிகளை தானும்
நான் காணவில்லை

நீ கவலைப்படுவாயா
என்பதில் கூட எனக்கு
அக்கறை இருக்கவில்லை

ஒவ்வொரு முறையும்
நான் வீழ்கையில்
தூக்கிவிட்ட உன்
தோள்களை கூட நான்
மறந்து இருந்தேன்
என் காதல் தோற்று
நான் உடைந்திருக்கையில்
மெளனமாக என்னை
அடை காத்ததை கூட
விரும்பாது இருந்தேன்

இன்று
என் மகனை கொஞ்சுகையிலும்
அவனின் மொழியை காண்கையிலும்
உன் ஞாபகம் ஏன் வருகின்றது..
அவனது சின்ன
தவறுகளை திருத்துகையில்
எப்படி உன் மொழி
என் நாவில் ஒட்டியது
சில வேளைகளில்
என் குரலில் கூட
உன் சொற்களின்
வாசம் எப்படி
வருகின்றது

உன்னை கொடும் நோயில்
பார்த்த நிமிடங்களில்
வராத அழுகையும்
உனக்கு சிதை மூட்டுகையில்
எழாத பெரும் துயரமும்
எப்படி
இப்போது மட்டும் எனக்கு
வருகின்றது

சொல் அப்பா சொல்

யுகம் யுகமாய் தொடரும்
அப்பன் மகன் உறவின்
எல்லாக் கண்ணிகளும்
இப்படித் தானா இருக்கும்

நீ கூட இப்படியா
உன் அப்பாவையும்
எல்லாம் முடிந்த பின்
உணர்ந்து கொண்டாய்
என்று சொல்

எனது மகனாவது
இதன் நுட்பத்தை புரிந்து
கொள்ளட்டும்
எனது இன்றைய
தவிப்பு அவனுக்கும்
வராது போகட்டும்

சொல் அப்பா சொல்

-நிழலி--

December 31, 2008

நானும் அப்பா எனும் ஆணும் 01

திமிர் ஏறிக் களைத்த
நரம்புகளுக்கிடையே
இன்னும் மிச்சமிருக்கின்றது
அப்பாவுக்காக அழும்
சில கண்ணீர் துளிகள்

வெப்பேறிய உணர்வுகளுக்கிடையே
அப்பாவின் விரல் பற்றி
இன்னொரு பயணம் செல்ல
காத்து தவிக்கின்றன
என் விரல்கள்

அப்பா பற்றிய நினைவுகளில்
எல்லாம் குரோதம் படரவிட்ட
ஒரு மாலைப்பொழுதில் தான்
அவரை
இழந்திருந்தேன்

*************************
2.

ஆண் உணர்வு புடைத்து
நிமிர்ந்து தலை தெறிக்க
ஓடும் போது அறுந்த முதல்
முதல் நாடி
என் அப்பாவுடனான நேசம்

அவரது ஒவ்வொரு
சொல்லிற்கும் எதிராக
நீண்டு முழங்கி ஓங்காரமாக
அறைந்தது என் ஆண்
மெளனம்

என் மெளனத்திற்கு
பதில் சொன்ன அவரது
ஒவ்வொரு
விடைகளிலும் தெறித்து
விழுந்தது ஆண் எனும்
மிருகத்தின் இரை தேடும்
குரோதம்

எனக்கும் அவருக்குமான
அனைத்து பிணைப்புகளிலும்
ஆண் திமிர் தன்
வெறுப்பு களிம்பை பூசிச் சென்றது

இரக்கமற்ற கூர் கொண்ட
இரு
கத்திகள் ஒன்றுடன் ஒன்று
உரசாமல் உறைக்குள்
இருப்பதில்லை


************

3.

செத்துப் போன அப்பாவின்
நிர்வாண உடலை
மலர்சாலையில் கண்ட
நொடியில்
எல்லா பதில்களும்
எனக்கு கிடைத்தன

என்னை பிறப்பித்த அவரது
ஆண் குறி
சலனமற்றுக் கிடந்தது

என்னை கைபிடித்து கூட்டிச் சென்ற
விரல்கள்
நீட்டி நிமிர்ந்து அசைவற்றுக்
கிடந்தன

தன்னை பின் தொடரச் சொன்ன
பாதங்கள்
விறைத்து கிடந்தன

என் போக்கில் சலிப்புற்று
பேசிய உதடுகள்
எனக்கு இறுதியாக சொல்ல
எத்தனித்த சொற்களை
அடைகாத்து வரண்டு கிடந்தன

************

எல்லாம் முடிந்து
அவர் எலும்புகளை எண்ணி
கடலில் கரைத்த மாலையின்
பின்னிரவில் என்
மனைவி சொன்னாள்

என் மகன் தன் வயிற்றில்
முதல் தடவையாக
உதைக்கின்றான் என


:நிழலி
17 June 2012

நிலவின் வருகை:

ஒரு இரவின் இடையில்
உயிரின் கலசம்
உடைந்தது

உணர்வுகளின் ஆர்ப்பரிப்பின்
உச்சத்தில் அவளை
இறுகத் தழுவினேன்
இறுக்கி அணைத்தேன்
முத்தமிடா இடங்களை
காதலின் உச்ச
வரிகள் நிரப்பிச் சென்றன

யுகங்களுக்கு அப்பால்
இருந்து கால பைரவன்
உயிரின் துளிகளை
சுமந்து என்னிடம் தந்தான்
என் தேவதையின்
காதல் இடைவெளியை
அந்த உயிர் துளிகளால்
நிரப்பினேன்

ஒரு மொட்டின்
அசைவை தன்னில்
என் தேவதை
எனக்குச் சொன்னாள்

ஆயிரம் கலவிகள்
கடந்த வீரத்தையும்
தன் நீந்தலையும்
என்னுள்
என் ஆண்மை
தன்னைப் பற்றி
வாய் வலிக்கச் சொன்னது

2

அந்த அறை எனக்கு
கருவறை

அந்த அறையில்
ஒரு உயிரின்
வருகைக்காய்
காத்திருந்தேன்

என் தாய் எனைப்
பெற்ற யோனி
வலி
நான் கண்டேன்

வார்த்தைகள் அற்றுப்
போகின
வாக்கியங்கள் தன்
ஆளுமை இழந்தன
எல்லா மொழியும்
தன் இருப்பை
தொலைத்தன

காலம் என்னை விட்டு
தானே கழன்று
கொள்வதாய்
நான் உணர்தேன்

பல யுகங்கள்
நீரின்றி
தாகம் கொண்ட
மானுடன் அலைந்த
உயிர் வற்றும்
தாகம்
நான் கொண்டேன்

எப்போது உயிரின்
இசை நான் கேட்பேன்

3

ஒரு கண இடைவெளியில்
நிலவின் வருகை
அமைந்திருந்தது

கீச்சுக் குரல்
கொண்ட அழுகை
என் வாழ்வின்
இடைவெளிகளை
நிரப்பியது

கால பைரவன்
சிரித்துக் கொண்டான்
யுகம் யுகமாய்
உனக்காக சேமித்த
நிலவு இது
என்று சொல்லிச்
சென்றான்

சின்ன நிலவு
விழி திறக்கையில்
என் உயிர்வாழ்தலின்
வலி இன்புற்றது
முதல் தொடுகையில்
விழிகள் கண்ணீரை
உதிர்த்தது
ஆயிரம் ஆண்டுகால
வாழ்வின் சுமை
விடுபட்டது

என் தேவதை
தந்த நிலவு
என் இருட்டினை
கடந்து செல்கின்றது

என்
தேவதையை திரும்பிப்
பார்கின்றேன்
கேட்காத அற்புத
இசையை அவள்
கண்களால்
சொல்லிக் கொண்டாள்
அதில் அவள்
காட்டாத உச்சபட்ச
காதல் நிரம்பியிருந்ததை
நான் அறிந்தேன்

ஒரு இரவின் இடையில்
உடைந்த கலசம்
நிலவாக பிரவாகித்து
ஓடியது
ஆண் பெண்
உறவின் நதி
இன்னொரு
நாகரீகத்தை
தோற்றுவித்துக்
கொண்டது

: நிழலி

(நவம்பர் 14, 2009 இரவு அன்று என் மகள் பிறக்கும் போது அருகிருந்த உணர்வின் பாற்பட்டு எழுதிய கவிதை. என்னால் மீள் திருத்தம் ஒரு போதும் செய்யப்பட மாட்டாத ஒரு உணர்வுக் கவிதை)
எழுதியது: நவம்பர் 18, இரவு 11:00

மனிதனும் பாம்பும்

பாம்பு !!
உடைப்பெடுத்த ஆற்றைப் போல்
பீறிட்டு எழும் ஆர்பரிப்புடன்
என் முன்னே
ஆடியது

வரிகள் எல்லாம்
அதன் தோலாக
தோலெல்லாம் அதன்
வரிகளாக
நெளிந்து நெளிந்து
சீறிக் கொண்டே
ஆர்ப்பரித்தது

இதிகாசங்கள் தம்மை
ஏமாற்றிய தவிப்பு
ஒரு கண்ணில்,
ஆயிரம் ஆயிரம் ஆண்டு
கடந்தும் மனிதன் மீது
மாறா வெஞ்சினம்
அதன் மறு
கண்ணில்

தனக்கும் மனிசனுக்குமான
தீர்க்க முடியா
கணக்கை பாம்பு
சொல்லியது
ஒவ்வொரு வரியிலும்
மனிதன் பெயர் வரும்போது
வெறுப்புடன் துப்பியது

பாம்பின் கால்கள் எல்லாம்
நியாயம் கேட்டு
வரலாறு முழுதும்
நடந்து நடந்தே
அழிந்து போனதாம்...
அதன் காதுகள்
மனிதனின் பம்மாத்து
வாக்குறுதிகளால் அறுந்து
விழுந்ததாம்

ஏவாளுக்கு கனி கொடுத்ததெனும்
பொய் பழி தீர்க்க
அது ஒவ்வொரு மாதத்திலும்
தோலுரித்து தவம் புரியுமாம்

வருடத்துக்கு ஒரு முறை
இயேசுவின் உயிர்தெழு ராத்திரியில்
மண்டி இட்டு அவரின்
காம இச்சைக்கான
பாவத்துக்காக
சிலுவை சுமக்குமாம்

தேவர்களுக்காக
தன்னை மத்தாக்கி
கடைந்த பெருங் கள்வன்
சிவனின் உடலெங்கும் இருந்த
விசத்தை தன் பல்லில்
தேக்கிய துயர் தீர்க்க
இரவில் மட்டுமெ கலவி கொண்டு
இரத்தினக் கல்லெடுத்து
வழிபடுமாம்

கண்கொத்தி பாம்பாய் மாறி
கண்களை கொய்து
சிவன் எனும் அற்பனுக்கு
அபிசேகம் செய்யுமாம்

நாகமென்று,
சாரை என்று
புடையன் என்று,
கண்கொத்தி என்று
கட்டு விரியன் என்று
கண்ணாடி விரியன் என்று
மண்ணுணி என்று
கொம்பேறி மூக்கன் என்று
சுருட்டை என்று
பச்சை என்று
ஆயிரம் பேர் சொல்லி அழைக்கினும்
....
தன்னை
பாவத்தின் சாபமாய்
சாபத்தின் பலனாய்
பலனில் வரும் துயராய்
துயரில் வரும் வெறுப்பாய்
ஈற்றில்
வெறுப்பில் வரும் வழிபாட்டாய்
மட்டுமே மனிதன்
வழிபடுகின்றானாம்


பல இரவு கடந்தும்
தூங்காத என்
இரவு ஒன்றில்
வந்த பாம்பு
தன் கதையை
சொல்லி புலம்பிற்று

****************

என் முடிவுறா இராக் காலத்தின்
இறுதியில் அடிக்கடி
ஒரு
பாம்பு வரும்

செதில் உதிர்த்து
விடம் கொண்டு
படம் காட்டி
ஒரு பெரு நாகம்
கனவில்
பீறிட்டு எழும்

என் கனவுகளின் மேல்
ஊர்ந்து போகும்
உணர்வுகளில்
விடம் தடவும்
நினைவுகளில் தங்கி
முழு உடல் அனைத்தையும்
நுனி வால் தாங்கி
படம் பிடித்து ஆடும்

இறுதியில் தனக்கும்
மனிசனுக்கும் இடையிலான
தீர்க்காத கணக்கை
விடம் கொண்டு
தாக்கி
சொல்லிச் செல்லும்

******************
அடுத்த நாள்
காலை நான்
ஆலகால நஞ்சுண்டவனாய்
விழித்தெழுவேன்



:நிழலி: ஆகஸ்ட் 21 அதி காலை 00:25 (5 கிளாஸ் வொட்கா)

கல்லறைகளில் தெய்வங்கள் சபிக்கின்றன

எங்கள் ஊர்களில்
எம் தெய்வங்கள்
கல்லறைகளில் தான்
உயிர்ப்புடன்
உறைந்திருக்கின்றன

எம் தெய்வங்கள்
கல்லாகிப் போனதில்லை
எம் பிரார்த்தனைக்காக
காத்திருந்ததும் இல்லை
அவர்களின் நேர்த்திக் கடன்கள்
எம்மை நோக்கியே இருந்தன

கல்லறைக்கு போகும் முன்
தம் கழுத்தில் தொங்கிய
கனவை
எம் உயிர்களில்
மாட்டி விட்டே போயினர்

எமக்காக பசித்திருந்தனர்
எமக்காக விழித்திருந்தனர்
எமக்காக நிலவற்ற
இருள் வேளைகளிலும்
தன்னந் தனியாக
காடுகள் கடந்தனர்
எதிரியின் இறுதி தோட்டா
முடியும் வரைக்கும்
உண்ணாதிருந்தனர்

நெஞ்சம் தகிக்கும்
கனவுகளை எம்
தெய்வங்கள் கண்டன
ஊரின் எல்லைவரைக்கும்
எதிரியை துரத்துவதாக
சன்னதம் கொண்டனர்
இறுதி துளி உயிர்
கரையும் வரைக்கும்
புதிய தேசம் பற்றியே
ஓயாது உரைத்தனர்

ஊர்களின் கோடியில்
ஒரு குழந்தை தூங்குவதற்காகவும்
எம் தெய்வங்கள்
நாள் முழுதும்
உபவாசம் இருந்தன
உயிரைச் சுருட்டும்
உப்புக் காற்றை
சுமக்கும் கடல் வெளிகளிலும்
ஒற்றை துடுப்புடன்
காவல் கொண்டனர்

2

எம் தெய்வங்கள் உறையும்
கல்லறைகள்
இன்று கதறுவதாய்
ஊர் குருவி அலறுகின்றது
கோயில்களிலும் குடியிருக்கும்
பிசாசுகள் கல்லறை தெய்வங்களையும்
தின்று பசி தீர்ப்பதாக
தலையால் அடித்து அரட்டுகின்றது

கல்லறைகள் சுமந்த
மண் கூட இன்று
தெய்வங்களை நினைத்து
கதறுகின்றதாம்

என்ன சொல்லி
அவர்களை ஆற்றுவோம்
இன்று

என்ன சொல்லி
அவர்களின் ஆன்மாவிடம்
மண்டியிடுவோம்
இன்று

எதைச் சொல்லி
அவர்களை தூங்க வைப்போம்
இன்று

எம்மிடம் ஏதேனும்
வார்த்தைகள் இருக்கா

தன் உறவுகள்
வருவர் என்று
கல்லறை மீது
காத்திருக்க போகும்
எம் தெய்வங்களை
இம்முறை
யார் ஆற்றுவர்

சந்தனப் பேழைகளில்
இனி அழுகை மட்டுமே
வெளி வருமா

3

யுகப் புருசர்களின்
கல்லறையில்
முதலாவது ஆணியை
எதிரி அறைந்தான்
இறுதி ஆணியை
நாம் அறைந்து கொண்டோம்

தெய்வங்களுக்கு முன்னால்
மண்டியிட்டே அவர்களின்
குரல்வளையை நெரித்தவர்களும்
எம்மிடையேதான் உள்ளனர்
என்று எப்படிச் சொல்வோம்
நாம்

இம்முறை நாம்
ஏற்றும் விளக்கை
காறித் துப்பியே
தெய்வங்கள் சபிக்கும்

யுகங்கள் பிளந்து
எழுந்த கொழுந்துகளை
கருக விட்டு
எதிரிக்கு
காணிக்கை வைத்த
எம்மைத் தூற்றும்

ஒன்றாய், நூறாய்
பல்லாயிரமாய்
பறவையாய் பாம்பாய்
பல்மிருகமாய்
பிளந்து கிடக்கும்
எம்மை நினைத்தே
தெய்வங்களும்
செத்துப் போகும்

கால வெளியில்
கண்ணுக் கெட்டா தூரம்
வரைக்கும் எம்
காவல் தெய்வங்கள்
எம்மை விட்டே
நீங்கிப் போகும்

தெய்வங்களுக்கு
பாடை கட்டிய பெருமையில்
மீதம் வாழ்வோம்

****
யுகப் புருசர்களின்
கல்லறையில்
முதலாவது ஆணியை
எதிரி அறைந்து கொண்டான்
இறுதி ஆணியை
நாம் அறைந்து கொண்டோம்

:
நிழலி
(23- கார்த்திகை- 2009)

எமக்கொரு நாடு கேடா


வெறுப்பு உமிழும் காலம்
மீது வாழ்வு சூழ் கொள்கின்றது

ஒரு கண்ணை மறு கண்
பிடுங்குது
தான் பார்க்கா காட்சிதனை
நீ பார்த்தல் ஆகாது
என ஆவேசம் கொள்ளுது
எதிரியின் தணல் எடுத்து
மறுகண்ணை
சுடுது

இது எம் சாபம்
யுகங்கள் தோறும்
நாம் இப்படி தான்
இருந்தோம்

ஒரே காட்சியை
ஒவ்வொருவரும்
வர்ணம் பூசி பார்த்தோம்
என் வர்ணம்
பார்க்காத கண்னை
வீதியின் முடிவில்
குச்சொழுங்கையில்
குடி வைத்தோம்

எம் கண்ணை நாமே
குருடாக்குவோம்
எம் கைகளில்
நாமே விலங்கிடுவோம்
வரலாற்றின் நீண்ட பக்கம்
எங்கும் எம்
தோல்வியை நாமே
எழுதிக் கொள்வோம்

எம் முதுகெலும்பில்
எதிரியின் மாட்டுச் சாணத்தை
அப்பியது நாம்
எம் குடிசைகளில்
கண் வைத்து
சகோதரிகளின்
அம்மணத்தை விற்றதும்
நாம்
ஈற்றில் எம் ஊரை
விற்றுக் கொடுத்ததும்
நாம்

இது எம் சாபம்
யுகங்கள் தோறும்
நாம் இப்படி தான்
இருந்தோம்

எமக்கொரு நாடு கேடா

உலகத்தின் எச்சில்
எம் முகத்தில்..
எதிரியின் மலம்
எம் உணவில்..
இருட்டில் உலவும்
காட்டேரியுடனும் உறவு கொள்வோம்
எம் இனத்தை சாகடிக்க

என் எதிரியின்
மூத்திரம் எனக்கு
தாகம் தீர்க்கும்
அவன் என் பங்கு
கேட்கும் தம்பியை
கொன்றால்...

சிறையுடைக்க வந்தவர்களையே
சிறை கட்ட ஆணையிட்டோம்
எம் சிறகாய் தம்மை ஆக்கியவர்களை
ஈட்டி முனையில் கொளுவி
எதிரிக்கு காட்டிக் கொடுத்தோம்

எமக்கொரு நாடு கேடா

என் இனம் பற்றி
கனவு வரும் ஒவ்வொரு
வேளயிலும்
என் படுக்கை முழுதும்
பூரான்கள் ஊர்ந்தன

என் ஊர் பற்றிய
நினைவுகளில்
மின்சார கம்புகளில்
பிணங்கள் தொங்கின
(மண்டை பிளந்து இருந்தது)

என் அண்ணனும்
அவனின் காதலியும்
ஒருவரை ஒருவர்
சுட்டுக் கொன்றனர்
சாக முன் இறுதி
கணத்தில்
"நீ துரோகி என " கூக்குரல் இட்டனர்

முன்னொரு நாள்
இருவரும் யாருமற்ற
ஓரிரவில்
விடுதலைக்கு போயிருந்தனர்

இது எம் சாபம்
யுகங்கள் தோறும்
நாம் இப்படி தான்
இருந்தோம்

எதிரியின் முலையறுபட்ட
குவேனி கிழவியா
எமக்கு
இப்படி ஒரு செய்வினை
செய்தது

ஒவ்வொரு தடவையும்
எம் கண்ணை நாம்
குத்தும் போது
துட்டகை முனி
சிரித்துக் கொண்டான்
தன் கணக்கு சரியென

எமக்கொரு நாடு கேடா

வரலாறு தோறும்
எம் தோல்வியை
ஊரும் சரக்கு அட்டையென
எழுதிச் செல்வோம்

:
நிழலி
Sep 06, 2009

நேற்றைய மனிதர்கள் கனவில் வந்தனர்



மீண்டும் உருப்பெறாத
கனவுகள் இரவின் நடு நிசியையும்
தாண்டி வருகின்றன
கைகள் முளைத்த பல கனவுகள்
கழுத்தையும், குரல்வளையும்
நெரித்து கொல்கின்றன

என் கனவுகளுக்கு
மொழிகள் இருப்பதில்லை
நிறங்கள் இருப்பதில்லை
சத்தம் இருப்பதில்லை
மெளனம் நிறைந்த கனவில்
நேற்றைய மனிதர்கள்
வந்துபோயினர்

அவர்களின் கேள்விகள்
அவர்களின் ஏமாற்றங்கள்
அவர்களின் துயரங்கள்
அவர்கள் சொல்லும் உண்மைகள்
எதற்கும் ஒலியிருப்பதில்லை
ஆயினும் உயிர் துளைத்து
ஓராயிரம் யுகங்களைக் கடக்கும்
வலிகளைச் சொல்லிச் செல்கின்றனர்

வலிய கனவொன்று இரவு
கடக்கும் ஒவ்வொரு நாளிலும்
நான் அச்சமுறுகின்றேன்
கண்கள் மேல் படர்ந்த
கனவின் சுமையில்
பகலின் பொழுதுகளையும்
பார்க்க அஞ்சுகின்றேன்

இந்த மனிதர்கள் எங்கிருந்து
வருகின்றனர்
எப்படி மீண்டும் மீண்டும்
என்னுள் இறங்கி
இரவு முழுதும் எனக்குள்
நடந்து செல்கின்றனர்
ஏன் ஒரே சீருடையை எப்பவும்
அணிந்து கொள்கின்றனர்
நேற்றோ முந்தநாளோ
அல்லது என்றுமோ
இவர்களை கண்டதாகவும்
ஞாபகம் இல்லை

ஒவ்வொரு இரவிலும்
ஏதோ ஒரு கணத்தில்
கனவுகள் உடைபடுகின்றபோது
வந்தவர்களும் உறைந்து போகின்றனர்
மறுநாளில் மீண்டும் உடைந்த
கனவு மீள் உருவம் கொள்கையில்
உறைந்தவர்கள் மீண்டும்
விட்ட இடத்திலிருந்து
அசைய தொடங்குகின்றனர்

நேற்றும் அந்தக் கனவு வந்தது
நேற்றைய மனிதர்கள் வந்தனர்
இடையிலொரு கணத்தில்
உடைந்து போனது கனவு..

உடைந்த கனவு விரல்
வழியே கசிந்து கவிதையாகியபின்
உறைந்து போனவர்கள்
மீண்டும் என் முன்
எழத் தொடங்கினர்…..

:நிழலி
(நவம்பர் 03/2009)

இரு உதடுகளின் முத்தம் நீங்கிய நாட்கள்

இரண்டு ஈர உதடுகள்
என்னை முத்தமிட்டு
நீங்கின

ஒன்றில்
பொத்தி வைத்த காதலும்
வெளிப்படுத்தி வெளிப்படுத்தி
அடங்கா(த)
காமமும் நிறைந்து இருந்தன

இன்னொன்றில்
வெள்ளை நிறத்தில்
அன்பு இருந்தது
"இவன் என் அப்பா"
என கட்டிப் பிடித்து
இறுக்கி சிரிக்கும்
சின்னச்
சிறுக்கியின்
பாசம் இருந்தது

இரண்டு முத்தங்களிலும்
என் வாழ்வு
தொங்கி நின்றது

********

அவர்களை அனுப்பிவிட்டு
வீடு செல்கின்றேன்
வாசல் திறக்கும் போது
சூனியம் அப்பிக் கொள்கின்றது

கட்டிலும், தொட்டிலும்
சோபாவும்,
சட்டியும் முட்டியும்,
முட்டை பொரித்த பின்
எஞ்சிப் போன தாச்சியும்
சிந்தப் பட்ட ஒரு சொட்டு
எண்ணெயும்,
என்னவள் கழட்டிப் போட்ட
பனிச் சப்பாத்தும்
என் மகள் அணிந்து கழட்டிய
'ஸ்கேர்ட்டும்"..
எல்லாமும் அப்படியே
இருக்க
எதுவும் அற்ற சூனியம்
அப்பிக் கொள்கின்றது

எல்லாம் இருந்தும்
எதுவும் அற்ற பெரு வெளியில்
மனம் அலைந்தது

என்னவளது
ஒரு விரலின்
தொடுகைக்காக
ஓராயிரம் யுகங்கள்
தொடுதல் அற்று காத்திருக்கும்
ஒரு
கள்ளிச் செடியாக
மாறலாம் என்று இருந்தது

என் மகளின்
மழலைச் சொல்லுக்காக
மெளனமாகவே இருக்கும்
எட்டாவது ஸ்(சு)வரம் ஆக
மாறலாம் என்று இருந்தது


***************************************

நடு இரவில் விழித்து
Flight Status பார்த்து
மீண்டும் படுக்கின்றேன்

பல யுகங்களாக
நித்திரை கொள்ளாத
கண்களின் சுமை
மனதில் ஏறுகின்றது
கால பைரவன் எப்படித்தான்
கண் தூங்காது
புளிய மரத்தின் உச்சிக் கொம்பில்
தவம் இருக்கின்றானோ

**
தூரத்தே
கொழும்பு ரயில் ஒன்றில்
குருட்டு சிங்கள பிச்சைக் காரன்
பாடியதை
மனம் மீண்டும் கேட்டது
அருகில்

"ஓராயிரம் ஆண்டு
வாழ்ந்த வாழ்வின்
அர்த்தத்தை ஒரு நாள் பிரிவு
தரும் என"

:நிழலி

(ஊருக்கு மனிசி மற்றும் மகளை அனுப்பிய பின் வீட்டை வந்த பின் தோன்றிய ஒரு உணர்ச்சி இது)
சனவரி 04, 2012)

அடிமைக் கால பெரு நதி நீள்கின்றது

யுகங்களுக்கு அப்பால்
பெருக்கெடுத்த காலம்
எம்மை அடிமையாக்கியே
இன்னும் நீண்டு செல்கின்றது

ஈழப் பெருங் கடலையும்
கால நதி சப்பித் துப்பியது

போர்ப் பரணி பாடி
அணிவகுத்த ஆயிரமாயிரம்
தோழர் போன திசை அழித்த
காலம் பெரும் பசி
கொண்டு அலையுது

நெஞ்சில் கனல் கக்க
தோழர்களை காத்த
மக்கள் மீதும்
நெருப்பு துகள்களை
கொட்டி பெரும்பசியை
தீர்த்தலைகின்றது

காலத்தின் திசைகளை
எமக்கு எதிரியாக்கியது
யார்
கொட்டும் குளவிகளின்
நுகத்தடியில்
எம் தலைவிதியை
செருகியது யார்
எதிரியின் கையில்
காலத்தை ஒப்படைத்தது
யார்

எமக்கான காலத்தை
நாமே எழுத முயன்ற
ரட்சகனையும் கால ராட்சதனா
கொன்றழித்தான்

அடிமையாய் கரையும் காலத்தை
உடைத்து சுதந்திரத்தின்
பெரு நெருப்பில்
சாம்பலாக்க முயன்றவனையுமா
கால அரக்கன்
சிதைத்து அழித்தான்

சூனியப் பெரு வெளியில்
கண்ணீர் துளியாய் போன
மந்தைகளின் வாழ்வை
மீட்க வந்த மேய்பனின்
கனவுகளையுமா
கால அசுரன்
சப்பித் துப்பினான்

உயிரற்ற உடலாய்
கிடக்கின்றோம் நாம்
இங்கு
உடலற்ற உயிராய்
அலைகின்றான் மேய்ப்பன்
அங்கு

அவனின் இறுதி
மூச்சிலும் எம்மில்
பற்றாத பெரு நெருப்பை
சபித்து கொண்டே
அலைகின்றான் அங்கு

கால சக்கரம்
நெரித்துப் போட்ட
எம் உணர்வுகளின்
மேல் காறி உமிழ்ந்தவாறே
அலைகின்றான் அங்கு

அவன் நடக்கும் பாதை
எங்கும் காலம் நின்று
பரிகாசம் செய்கின்றது
பற்றாத பெரு நெருப்பு
பற்றி கேலி செய்கின்றது

எம் மீதான
தோற்றுப் போன அவனின்
நம்பிக்கைகள் மீது
அவனின் ஆத்மா
கிடந்தழுகின்றது

இனி
அவன் தன் புல்வெளிகளை
இந்த ஆட்டுக் கூட்டத்திற்கு
தர மாட்டான்

காலத்தை
மாற்றி
எழுத முயன்றவனின்
தோல்வி
அவனின் மந்தைக் கூட்டதாலேயே
எழுதப் பட்டது

யுகங்களுக்கு அப்பால்
பெருக்கெடுத்த காலம்
எம்மை அடிமையாக்கியே
இன்னும் நீண்டு செல்கின்றது..


:நிழலி

(July 22, 2009
காலை 11:50)

எனது மரணம்: முதலாவது அறிக்கை: நிழலி

இப்போதெல்லாம்
மரணம் பற்றிய
எண்ணங்கள் அடிக்கடி
வருகின்றன
பல தடவை மரணத்தின்
கற்பூர வாசனை
(இடையில் சாணி வாசனையும் வரும்)
என்னருகே வந்தும் உள்ளது

மரணம் நேற்று
காபி கடையில் (Starbucks)
நான் ஒடு cup காபிக்காக
காத்திருக்கையில்
என் பக்கம் வந்து
அமர்ந்திருந்தது
எதுவும் பேசாமல்
அதன்
கண்ணின் ஓரம் நீர்
துளி இருந்தது

திடீரென ஒரு Right turn
இல் என் car திருப்புகையில்
மரணம் என் பக்கத்து
seat இல்
அமர்ந்திருந்தது
என்னை கேள்வி கேட்குமாய்
அதன் முகம் இருந்தது

பின்
அந்த இரவில்
சரியாக நடுச் சாமத்தில்
மனைவியை தேடி
கைகள் போகையில்
அருகே
மரணம் படுத்திருந்தது
இம்முறையும்
ஒற்றை வார்த்தையும்
பேசவில்லை அது

மரணத்தின் முகத்தை
முன்பும் பார்த்திருக்கின்றேன்
உயிர் தப்ப
எதிரியின் காலை முத்தமிடுகையில்
மரணம் காறித் துப்பிவிட்டு
போயிருக்கு

எதிரியின் நகரத்தில்
என்னை விற்கையிலும்
அது பரிகாசம் செய்திருக்கு
நான் இரட்டை நாக்கில்
தொங்குகின்றேனாம் என்று
(ஒன்று தமிழ் மற்றது வாழ்வு)

ஆனால் இப்பவெல்லாம்
அது ஒன்றும் சொல்வதுமில்லை
செய்வதுமில்லை

ஒரு அகதி போன்று
என்னருகே வரும்
மீண்டும் விலகிப் போய்
மெளனமாகப் பார்க்கும்
அதன் விழிகளில்
என் வம்சம் முழுதும் எரித்த
வேட்கை மிச்சமிருக்கும்

எப்போது
என்னை ஆக்கிரமிப்பாய்
எனக் கேட்டவுடன்
மர்மமாய் அழுது
விலகிச் செல்லும்

மரணம் கூட தீண்டா
உலகிலா நான் இருக்கின்றேன்
***********

எனக்கு மரணத்தின்
வாசனை இப்பவெல்லாம்
பிடித்துப் போகின்றது

அப்பா சாகும் நாளின்
முன்னிரவில்
அந்த வாசனையை
அவரில் கண்டேன்
அவரின் அறை முழுதும்
அது நிரம்பியிருந்தது

பின் என் மருமகனின்
சாவுச் செய்தி கேட்ட
நாளின் முதல் நாள்
அந்த வாசனை
என் கனவுகளிலும்
நிரம்பி இருப்பதை
நினைவு கொள்கின்றேன்

மரணம்
எப்போதும் அறிவித்து வரும்
விருந்தாளியாகவே
எனக்கு வந்திருக்கு
ஒன்றில் என் அப்பனை
இல்லையேல் என் உறவை
காவு வாங்குகையிலலும்
அது பாவம்
அறிவித்து விட்டே வந்தது

ஒரு மெல்லிய
காற்றாய் மரணத்தின்
வாசனை பரவும்
பின் என்னுயிரை
உருக்கும்

******

இப்போது அது
என்னிடம் அடிக்கடி வருகின்றது

எல்லாரும் நித்திரை கொண்டபின்
என் அறை முழுதும்
வாசம் கொள்கின்றது

சில நேரம் அது அழும்
சில நேரம் தானே
கடவுள் என அரற்றும்
தான் தழுவா உயிர் எது
என இறுமாப்புக் கொள்ளும்
தான் வெல்லாத இடம் எங்கே
எனக் கேட்கும்
சில நேரம்
பச்சிளம் பாலகனை கொன்ற
வெறியில்
மூச்சிறைக்கும்

அப்படிக் கொன்ற பின்
அது பிதற்றும் போது
ஒன்றும் நான் சொல்வதில்லை
என் பிள்ளையை மட்டும்
ஒளித்து வைப்பேன்

இன்றிரவும் என்னால்
மரணத்தின் வாசனையை
நுகர முடிகின்றது

மெல்ல மெல்ல
என்னை ஆரத் தழுவத்
தொடங்கிய வாசனை
அது

மெல்லிய
போதை ஏறும்
கற்பூரம் மணமும்
சாணி மணமும் கொண்ட
அந்த வாசனையை
உணர்திருக்கின்றீர்களா?


Apr 17, 2010

உடைந்த மூங்கிலானேன்

ஒரு உடைந்த மூங்கில் பற்றி
யாரும் கவலைப் பட வேண்டாம்
உடைந்த மூங்கிலால்
புல்லாங்குழல்
ஆக முடியவில்லை

அது முகாரி பாடியதா
இல்லை
புரட்சி பாடியதா
இல்லை
தன்னையே உடைத்து
அழுகுரலை
இசைத்ததா

யாரும் கவலைப்
படவேண்டாம்

மூங்கிலின் மேலிருந்த
குருவி
தன் காதலனின்
வீரச் சாவு கேட்டு
அழுது குளறியது

மூங்கிலை
கடந்த காற்று
தன் தலைவனின்
வீர மரணம் பற்றி
ஓங்கி அறைந்து
ஒப்பாரி வைத்தது

மூங்கில் அழவில்லை
மூங்கில் ஒப்பாரி வைக்கவில்லை
தன்னை கடக்கும்
காற்றனைத்தும் அழுகை அல்ல
இசை என்றது

அதன்
உடைவு ஆரம்பித்து
இருந்ததை
அது அறியவில்லை
இன்னும்
புல்லாங்குழல் ஆகலாம்
எனும் கனவில்
அது மிதந்தது

மூங்கிலால்
தன் உடைவை
நம்ப முடியவில்லை

தன் காதலியுடன்
சல்லாபித்தது
தன் ஆசை நாயகியுடன்
காமுற்றது
இன்னும்
போதை ஏறிய கண்களுடன்
காமம் தேடி அலைந்தது
பெண் வாசம் தேடி
அண்டம் வரை சென்றது

மூங்கில் உடைந்து விட்டது
என அயலவர்
சொன்னர்
இது அதன் அந்திம காலம்
என உறவினர்
சொன்னர்
அதன் இறுதி நாள்
இதுவென
எல்லோரும்
உரைத்தனர்
மூங்கிலின் வீட்டு
வாசலில்
பாடை கட்டப் பட்டுகொண்டிருக்கு


தெருவில் பறை அடிப்பவன்
சென்றான்
ஒற்றை மாடு
அசை போட்டு
சென்றது
யாருமற்ற வெளியில்
தலைவன் நடந்து
போனான்
அவனின் பின்னால்
அவனது நிழல் கூட
இல்லை

மூங்கில்
தன் உடைவு பற்றி
இன்னும் அறியவில்லை
அதன்
ஒவ்வொரு கணுவிலும்
கண்ணீர் இருக்கு
எனவும் அறியவில்லை

அது பாட்டுக்கு
கவிதை எழுதிச் சென்றது

இரவின் நடு நிசியில்
மாண்ட தோழர் பற்றி
கனவு கண்டது
தான் அவர்களுக்காய்
புல்லாங்குழல் ஆனது
பற்றியும் கனவு கொண்டது

உடைந்து
கண்ணீர் ஒழுகும்
மூங்கில் பற்றி யாரும்
அழ வேண்டாம்

அது புல்லாங்குழல்
கனவில் இன்றும்
கவிதை எழுதுகின்றது
*************

நிழலி
05 aug 2009 10`28 PM

ஆட்காட்டி குருவியின் கண்ணீர் கவிதையாகின்றது

வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து
ஒரு சொட்டு
கண்ணீர்
கவிதையாகின்றது

கேட்கின்றதா உங்களுக்கு

வயல் வெளி தோறும்
என் தலைவனின்
காலடிச் சுவடு தேடி
ஆட்காட்டி குருவி பாடும் பாட்டு
கேட்கின்றதா உங்களுக்கு?

தன் தலையை மண்ணில்
மோதி அலறி
அழுகின்றது
அது
முழுச் சிறகும் உதிர்த்து
ஒற்றைக் காலில்
தவம் இருக்கின்றது

அதன் அலறல் கேட்கின்றதா
உங்களுக்கு
அதன் குரலில்
இந்த யுகத்தின் அலறல்
இருக்கின்றது

குருவியின் தனிமையில்
காலம் உறைகின்றது
உறைந்த காலத்தில்
நாம் சிதைவுற்றிருந்தோம்

ஆட்காட்டி குருவி கூட
காட்ட ஆளின்றி
ஊர் முழுதும்
சுற்றி வந்து
அழுகின்றதாம்

அது முன்னர்
வீரர்களின் கல்லறையில்
இருந்து பாடி
தூங்க வைத்தது

மூத்த மகனை போருக்கு
இழந்த தாயின் அருகிருந்து
கண்ணீர் துடைத்து
ஆறுதல் கொடுத்தது

வீட்டின் முகப்பில்
இருந்து ஊரை தூங்க
வைக்க தாலாட்டும்
பாடியிருந்தது

இன்று ஆட்காட்ட அதுக்கு
தோழர் இல்லை
இளைப்பாற
போராளியின் தோளில்லை
பறந்து பாட்டுப் பாட
வான் வெளி
இல்லை
புரண்டு சாக
ஒரு மண் கூட இல்லை

ஏன் இப்படி ஆனது
என்று சொல்ல
யாருமில்லை அதுக்கு

ஆட்காட்டி
யாருமற்ற தனிமையில்
வெளிகள் தோறும்
கண்ணீரை எழுதிச் செல்கின்றது

ஆட்காட்டியின்
வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து
ஒரு சொட்டு
கண்ணீர்
கவிதையாகின்றது
-----------

: நிழலி: 12-Aug-2009
இரவு: 10:25 

அப்பாவின் ஈர நினைவுகள்....

வேர்களில் இருந்து கசியும்
நீராய் அப்பாவின்
நினைவுகள்
எனக்குள்..


ஐந்து வயது வரை நடக்கமுடியாது
தவிக்கும் போது
தோள்களில் தூக்கி
திரிந்த காலங்கள்...
பனைவெளிகளின் ஊடாக
சைக்கிள் பாரில் எனை
வைத்து கதை
சொல்லிய பொழுதுகள்....
பெரும் குளக்கட்டின் ஓரம்
தடுக்கி விழாமல் இருக்க
விரல்கள் இறுக்கி
நடந்த நேரங்கள்...
பெரும் மழை சோ என்று கொட்ட
நனைதலின் சுகம் சொல்லித்
தந்த தருணங்கள்...


இப்பதான் நடந்ததாய்
தெரியும் பொழுதுகளெல்லாம்
எப்பவும் தொட முடியாத திக்கில்
உறைந்து விட்ட சித்திரங்களாய்...
ஆற்றாத் துயர் அணை மேவினும்
நெருங்க முடியாத தூரங்களாய்....

பசிய இலையொன்றின்
அந்திம காலத்து உதிரும்
தவிப்பில் அப்பாவை கண்ட
இறுதிப் பொழுதுகளில் தான்
வாழ்வின் நிதர்சனம்
எனக்குள் புகுந்து கொண்டது...
பெரும் மரமாய்
சூறைக் காற்றாய்
அலை எழும் கடலாய்
நான் கண்ட அப்பாவின்
உடல் தீயில் உருகிய
தருணங்களி தான்
வாழ்வின் வனப்பும் புரிபட்டது..

சாம்பலின் ஊடாக தேடி தேடி
'இது விலா எழும்பு
'இது மூட்டெழும்பு' என்று
அவரது
எலும்புகளை பொறுக்கிய
அந்த வினாடிகளில்தான்
வாழ்க்கையின் பரிமாணமும்
பிடிபட்டது..

இப்பவெல்லாம் அடிக்கடி
அவர் நினைவுகள் எழுகின்றன
இறந்த நாட்களில் உயிரற்றுக்
கிடந்த அவர் பற்றிய நினைவுகள்
இன்று உதிரம் பாச்சிய
காற்றாக மீண்டும் மீண்டும்
எனக்குள் எழுகின்றன

என் பிள்ளைகளை காணும் போதும்
அவர்களை நெஞ்சாரத் தழுவும் போதும்
தவறுகளைத் திருத்தும் போதும்
கண்டிப்பின் உச்சியில் நிற்கும் போதும்
அமைதியாக அவர்கள் உறங்கும் போதும்
மீண்டும் மீண்டும் என் அப்பாவின்
நினைவுகள் எழுகின்றன

அவர்கள் இடும் முத்தத்தின்
ஈரத்தில் அவர் கண்களில்
தெரிந்த ஈரம் எனக்குள்
தெரிகின்றது....

இப்படியான சில
கணங்களில்
நானே அவராக மாறிவிடுவம்
இல்லை அவரே நானாக
ஆகிவிடுவதும்
நடக்கத்தான் செய்கின்றன....

மார்ச், 25 2013

------------

இன்று என் அப்பாவின் 71 ஆவது பிறந்த தினம். காலையில் இருந்து மிதமிஞ்சி அருட்டிக் கொண்டு இருக்கும் அவர் பற்றிய நினைவுகளில் எழுதிய ஆக்கம் இது,

கனவுகள் கொல்லப்பட்ட குழந்தைகள்:


கனவுகள் கொல்லப்பட்ட குழந்தைகள்
------------------------------------------------------------------
அவர்கள்
நித்திரை கொண்டு கொண்டிருந்த
சிறு பிள்ளைகள் மீது டாங்கிகளையும்
ஏவுகணைகளையும் ஏவிக் கொல்கின்றனர்



இறக்கும் போது அக் குழந்தைகள்
எதை கனவு கொண்டு இருந்திருக்கும்..
வெடிகுண்டு சத்தம் கேட்காத
ஒரு இரவை அதுகள் கற்பனை செய்து கொண்டு
தாயின் மடியில் தலை வைத்தும்
அப்பாவின் மடியில் கால் நீட்டியும்
படுப்பதாய் கனவு கொண்டிருக்கும்

ஒரு சின்ன பொம்மையுடன்
கட்டிப்பிடித்து நித்திரை கொண்டு இருந்திருக்கும்
தங்கள் வளர்ப்பு நாயின்
குட்டிகள் மழையில் நனைந்துடுமோ
என்று கவலைப்பட்டுக் கொண்டு
இருந்ந்திருக்கும்

தெருவில் தொலை தூரத்தில்
வரும் ஐஸ் கிறீம் காரனின்
பாம் பாம் எனும் ஹோர்னைக் கேட்டு
நாவூற காத்திருந்து கொண்டு இருந்திருக்கும்

ஆனால் எல்லா போர் நகரங்களிலும்
அழித்தொழிக்கப்படும் குழந்தைகளின்
கனவுகள் போல
அவர்களின் கனவுகளும்
அழிந்து போயிருக்கும்

எங்கள் ஊர்களிலும் ஊர்ந்த
டாங்கிகளின் கீழும்
வீழ்ந்த ஷெல்களின் கீழும்
விமானக் குண்டுகளின் ஆழத்திலும்
ஆயிரமாயிரம்
எம் குழந்தைகளின்
கனவுகள் புதைக்கப்பட்டன

கொல்லப்படும் தறுவாயில்
ஒரு குழந்தையின்
ஓலம் எப்படிப்ப்ட்டது
தெரியுமா
அதன் கண்கள் எப்படி
சொருகிப் போகும் என
அறிவீர்களா
அது சாகும் போது
அருகிருக்கும் தாயின்
கதறல் எத்தகையது
எனக் கேட்டிருக்கின்றீர்களா


போரில் கொல்லப்படும் எல்லாக்
குழந்தைகளையும் போல
அவர்கள்
கொல்லப்படுகின்றனர்
கொல்லப்பட்ட எல்லாக் குழந்தைகளின்
கனவுகள் போலவே அவர்கள்
கனவும் சிதைக்கப்படுகின்றன
கொல்லப்படும் உயிர்களைப் போன்றே
கண்களின் ஓரத்தில் துளி கண்னீரை
சிந்தி சாகின்றனர்

அவர்கள்
நித்திரை கொண்டு கொண்டிருந்த
சிறு பிள்ளைகள் மீது டாங்கிகளையும்
ஏவுகணைகளையும் ஏவிக் கொல்கின்றனர்
சிதைந்த குழந்தைகளின் உடல்கள்
மீது கொடிகளை பறக்க விடுகின்றனர்.

நிழலி
31/July/2014

இமைக்குள் நிற்கும் கேள்விகள்


நீண்ட இரவின் முடிவில்
காத்திருக்கின்றது
நேற்றைய வாழ்வில்
உதிர்ந்து போன ஒரு
பூவின் இதழ்

காட்டு வழிப் பயணத்தின்
இறுதியில் கிடைக்கின்றது
வற்றிப் போன நதியின்
சுவடு

தூரப் பயணம் ஒன்றின்
கடைசித் தரிப்பிடத்தில்
அழிந்து போனது
ஆரம்பித்த இடமும்
இறுதி புள்ளியும்

எங்கு சென்று தேடுவேன்
காணாமல் போன என்
உயிர் தொங்கிய
பெரு விருட்சத்தை

அடர்ந்து பெரிதாக நின்றிருந்த
பெரு விருட்சத்தின்
கிளையில்
தொங்கிய பறவைகள் அனைத்தையும்
பெரும் பூதம் தின்றுகொழுத்த
கதையையும்
அந்த
பூதத்தை என் தோழர்களே
வளர்த்து பறவைகளை தின்னக்
கொடுத்த கதையையும்
எப்படிச் சொல்வேன்
என் பிள்ளைக்கும்
அவன் பேரனுக்கும்

என் வரலாறு முழுதும்
பரவிக் கிடக்கும்
சந்துகள் எல்லாம்
என் தோழர்களின் கல்லறையை
என் மற்ற தோழர்களே தோண்டிய கதையை
எப்படிக் சொல்வேன்
என் மகளுக்கும்
அவள் பூட்டிக்கும்

இறுகிக் கிடக்கின்றது மனம்
ஐயோ
என்று நெஞ்சில் அடித்து
அழவும் முடியாமல்

என்று ஒப்பாரியும் இயலாமல்
சொற்கள் அனைத்தும்
வறண்டு போய்
செத்து கிடக்கின்றது

எங்கு விட்டோம் பிழை
எங்கும் விட்டோமா பிழை ?

நித்திரை வரா
இரவொன்றில்
மேலே வானில் கத்திக் கொண்டு
போகும் Goose இன்
குரலிலும்
தேடுகின்றேன்

இருண்டு கிடக்கும் என் தேசத்தில்
இருந்து ஒரு பதில்
வராதா என

நிழலி : ஏப்ரல் 03 /2011 மாலை

என் முகத்தை எங்காவது கண்டீரா?

என் முகத்தை எங்காவது கண்டீரா?

என் விம்பத்தை கண்ணாடியில்
பார்க்கின்றேன்

உடைந்து போன ஒரு கண்ணாடியில்
தெரியும்
சிதறிய முகமாய் எனக்கு
என் முகம் தெரிந்தது
சிதறல்களில் தெரிந்த
என் முகம்கள்
ஒவ்வொரு முகமூடி அணிந்து
இருந்தது

இப்படி முன்னம்
என் முகம் இருக்கவில்லை

அதற்கே அதற்கு என
இரு கண்கள் இருந்தன
இரு செவிகள்
இருந்தன
ஒரே ஒரு நாக்கும்
ஒரு சோடி உதடுகள்
மட்டுமே இருந்தன
எப்ப பார்த்தாலும்
இது என் முகம்
என்று உரிமை கோரியிருந்தேன்

ஆனால்
கண்ணாடியில் இப்ப தெரியும்
என் முகம் எனதில்லை

என் முகத்தை என்னிடம்
இருந்து திருடியது யார்?

என் கண்களை அகற்றி
தம் கண்களை
செருகியது எவர்?

எனக்கே எனக்காக
இருந்த குரலையும்
திருடி
அதில் தம் குரலையும்
பதிந்தவர் யார்?

என் முகம்
என் குரல்
என் பார்வை
திருடப்பட்டனவா?
அல்லது
என்னாலேயே
தொலைக்கப்பட்டனவா?

எனக்கான ஒரு சொட்டு
வசனம் கூட இன்று
எனக்கில்லை
எனக்கான வார்த்தைகளைக் கூட
திருடி கொண்டது யார்?

உடைந்து போன
அல்லது திருட்டுப் போன
கோப்பைத் தட்டில்
வாழ்க்கையை உண்ணுகின்றேன்

எனது வாழ்க்கையை
நான் உண்ட
சாப்பாட்டுக் கோப்பை
காணாமல் போயிற்றா
அல்லது
திருட்டுப் போயிற்றா
என்று கூட உணராத
ஒரு காலைப் பொழுதில் தான்
என்
முகமும் சிதைக்கப்பட்டது
என்பேன்
சிதைத்தவர்களுக்காக பல முறை
காவடி எடுத்து இருந்தேன்

என் முகத்தை
நீங்கள் போகும்
ஒரு தெருவிலோ
அல்லது
ஒரு சந்திலோ
அல்லது
ஒரு
மலசல கூடத்திலோ
கண்டெடுத்தாலோ....

அந்த முகத்திடம் சொல்லுங்கள்
அதன் உரிமையாளன்
பல ஆண்டுகள் முன்னமே
செத்துவிட்டான் என
---

நிழலி
சனவரி 08, 2012