Thursday, October 23, 2014

நிலவின் வருகை:

ஒரு இரவின் இடையில்
உயிரின் கலசம்
உடைந்தது

உணர்வுகளின் ஆர்ப்பரிப்பின்
உச்சத்தில் அவளை
இறுகத் தழுவினேன்
இறுக்கி அணைத்தேன்
முத்தமிடா இடங்களை
காதலின் உச்ச
வரிகள் நிரப்பிச் சென்றன

யுகங்களுக்கு அப்பால்
இருந்து கால பைரவன்
உயிரின் துளிகளை
சுமந்து என்னிடம் தந்தான்
என் தேவதையின்
காதல் இடைவெளியை
அந்த உயிர் துளிகளால்
நிரப்பினேன்

ஒரு மொட்டின்
அசைவை தன்னில்
என் தேவதை
எனக்குச் சொன்னாள்

ஆயிரம் கலவிகள்
கடந்த வீரத்தையும்
தன் நீந்தலையும்
என்னுள்
என் ஆண்மை
தன்னைப் பற்றி
வாய் வலிக்கச் சொன்னது

2

அந்த அறை எனக்கு
கருவறை

அந்த அறையில்
ஒரு உயிரின்
வருகைக்காய்
காத்திருந்தேன்

என் தாய் எனைப்
பெற்ற யோனி
வலி
நான் கண்டேன்

வார்த்தைகள் அற்றுப்
போகின
வாக்கியங்கள் தன்
ஆளுமை இழந்தன
எல்லா மொழியும்
தன் இருப்பை
தொலைத்தன

காலம் என்னை விட்டு
தானே கழன்று
கொள்வதாய்
நான் உணர்தேன்

பல யுகங்கள்
நீரின்றி
தாகம் கொண்ட
மானுடன் அலைந்த
உயிர் வற்றும்
தாகம்
நான் கொண்டேன்

எப்போது உயிரின்
இசை நான் கேட்பேன்

3

ஒரு கண இடைவெளியில்
நிலவின் வருகை
அமைந்திருந்தது

கீச்சுக் குரல்
கொண்ட அழுகை
என் வாழ்வின்
இடைவெளிகளை
நிரப்பியது

கால பைரவன்
சிரித்துக் கொண்டான்
யுகம் யுகமாய்
உனக்காக சேமித்த
நிலவு இது
என்று சொல்லிச்
சென்றான்

சின்ன நிலவு
விழி திறக்கையில்
என் உயிர்வாழ்தலின்
வலி இன்புற்றது
முதல் தொடுகையில்
விழிகள் கண்ணீரை
உதிர்த்தது
ஆயிரம் ஆண்டுகால
வாழ்வின் சுமை
விடுபட்டது

என் தேவதை
தந்த நிலவு
என் இருட்டினை
கடந்து செல்கின்றது

என்
தேவதையை திரும்பிப்
பார்கின்றேன்
கேட்காத அற்புத
இசையை அவள்
கண்களால்
சொல்லிக் கொண்டாள்
அதில் அவள்
காட்டாத உச்சபட்ச
காதல் நிரம்பியிருந்ததை
நான் அறிந்தேன்

ஒரு இரவின் இடையில்
உடைந்த கலசம்
நிலவாக பிரவாகித்து
ஓடியது
ஆண் பெண்
உறவின் நதி
இன்னொரு
நாகரீகத்தை
தோற்றுவித்துக்
கொண்டது

: நிழலி

(நவம்பர் 14, 2009 இரவு அன்று என் மகள் பிறக்கும் போது அருகிருந்த உணர்வின் பாற்பட்டு எழுதிய கவிதை. என்னால் மீள் திருத்தம் ஒரு போதும் செய்யப்பட மாட்டாத ஒரு உணர்வுக் கவிதை)
எழுதியது: நவம்பர் 18, இரவு 11:00

No comments: