Thursday, October 23, 2014

மனிதனும் பாம்பும்

பாம்பு !!
உடைப்பெடுத்த ஆற்றைப் போல்
பீறிட்டு எழும் ஆர்பரிப்புடன்
என் முன்னே
ஆடியது

வரிகள் எல்லாம்
அதன் தோலாக
தோலெல்லாம் அதன்
வரிகளாக
நெளிந்து நெளிந்து
சீறிக் கொண்டே
ஆர்ப்பரித்தது

இதிகாசங்கள் தம்மை
ஏமாற்றிய தவிப்பு
ஒரு கண்ணில்,
ஆயிரம் ஆயிரம் ஆண்டு
கடந்தும் மனிதன் மீது
மாறா வெஞ்சினம்
அதன் மறு
கண்ணில்

தனக்கும் மனிசனுக்குமான
தீர்க்க முடியா
கணக்கை பாம்பு
சொல்லியது
ஒவ்வொரு வரியிலும்
மனிதன் பெயர் வரும்போது
வெறுப்புடன் துப்பியது

பாம்பின் கால்கள் எல்லாம்
நியாயம் கேட்டு
வரலாறு முழுதும்
நடந்து நடந்தே
அழிந்து போனதாம்...
அதன் காதுகள்
மனிதனின் பம்மாத்து
வாக்குறுதிகளால் அறுந்து
விழுந்ததாம்

ஏவாளுக்கு கனி கொடுத்ததெனும்
பொய் பழி தீர்க்க
அது ஒவ்வொரு மாதத்திலும்
தோலுரித்து தவம் புரியுமாம்

வருடத்துக்கு ஒரு முறை
இயேசுவின் உயிர்தெழு ராத்திரியில்
மண்டி இட்டு அவரின்
காம இச்சைக்கான
பாவத்துக்காக
சிலுவை சுமக்குமாம்

தேவர்களுக்காக
தன்னை மத்தாக்கி
கடைந்த பெருங் கள்வன்
சிவனின் உடலெங்கும் இருந்த
விசத்தை தன் பல்லில்
தேக்கிய துயர் தீர்க்க
இரவில் மட்டுமெ கலவி கொண்டு
இரத்தினக் கல்லெடுத்து
வழிபடுமாம்

கண்கொத்தி பாம்பாய் மாறி
கண்களை கொய்து
சிவன் எனும் அற்பனுக்கு
அபிசேகம் செய்யுமாம்

நாகமென்று,
சாரை என்று
புடையன் என்று,
கண்கொத்தி என்று
கட்டு விரியன் என்று
கண்ணாடி விரியன் என்று
மண்ணுணி என்று
கொம்பேறி மூக்கன் என்று
சுருட்டை என்று
பச்சை என்று
ஆயிரம் பேர் சொல்லி அழைக்கினும்
....
தன்னை
பாவத்தின் சாபமாய்
சாபத்தின் பலனாய்
பலனில் வரும் துயராய்
துயரில் வரும் வெறுப்பாய்
ஈற்றில்
வெறுப்பில் வரும் வழிபாட்டாய்
மட்டுமே மனிதன்
வழிபடுகின்றானாம்


பல இரவு கடந்தும்
தூங்காத என்
இரவு ஒன்றில்
வந்த பாம்பு
தன் கதையை
சொல்லி புலம்பிற்று

****************

என் முடிவுறா இராக் காலத்தின்
இறுதியில் அடிக்கடி
ஒரு
பாம்பு வரும்

செதில் உதிர்த்து
விடம் கொண்டு
படம் காட்டி
ஒரு பெரு நாகம்
கனவில்
பீறிட்டு எழும்

என் கனவுகளின் மேல்
ஊர்ந்து போகும்
உணர்வுகளில்
விடம் தடவும்
நினைவுகளில் தங்கி
முழு உடல் அனைத்தையும்
நுனி வால் தாங்கி
படம் பிடித்து ஆடும்

இறுதியில் தனக்கும்
மனிசனுக்கும் இடையிலான
தீர்க்காத கணக்கை
விடம் கொண்டு
தாக்கி
சொல்லிச் செல்லும்

******************
அடுத்த நாள்
காலை நான்
ஆலகால நஞ்சுண்டவனாய்
விழித்தெழுவேன்



:நிழலி: ஆகஸ்ட் 21 அதி காலை 00:25 (5 கிளாஸ் வொட்கா)

No comments: