Thursday, October 23, 2014

நானும் அப்பா எனும் ஆணும் 01

திமிர் ஏறிக் களைத்த
நரம்புகளுக்கிடையே
இன்னும் மிச்சமிருக்கின்றது
அப்பாவுக்காக அழும்
சில கண்ணீர் துளிகள்

வெப்பேறிய உணர்வுகளுக்கிடையே
அப்பாவின் விரல் பற்றி
இன்னொரு பயணம் செல்ல
காத்து தவிக்கின்றன
என் விரல்கள்

அப்பா பற்றிய நினைவுகளில்
எல்லாம் குரோதம் படரவிட்ட
ஒரு மாலைப்பொழுதில் தான்
அவரை
இழந்திருந்தேன்

*************************
2.

ஆண் உணர்வு புடைத்து
நிமிர்ந்து தலை தெறிக்க
ஓடும் போது அறுந்த முதல்
முதல் நாடி
என் அப்பாவுடனான நேசம்

அவரது ஒவ்வொரு
சொல்லிற்கும் எதிராக
நீண்டு முழங்கி ஓங்காரமாக
அறைந்தது என் ஆண்
மெளனம்

என் மெளனத்திற்கு
பதில் சொன்ன அவரது
ஒவ்வொரு
விடைகளிலும் தெறித்து
விழுந்தது ஆண் எனும்
மிருகத்தின் இரை தேடும்
குரோதம்

எனக்கும் அவருக்குமான
அனைத்து பிணைப்புகளிலும்
ஆண் திமிர் தன்
வெறுப்பு களிம்பை பூசிச் சென்றது

இரக்கமற்ற கூர் கொண்ட
இரு
கத்திகள் ஒன்றுடன் ஒன்று
உரசாமல் உறைக்குள்
இருப்பதில்லை


************

3.

செத்துப் போன அப்பாவின்
நிர்வாண உடலை
மலர்சாலையில் கண்ட
நொடியில்
எல்லா பதில்களும்
எனக்கு கிடைத்தன

என்னை பிறப்பித்த அவரது
ஆண் குறி
சலனமற்றுக் கிடந்தது

என்னை கைபிடித்து கூட்டிச் சென்ற
விரல்கள்
நீட்டி நிமிர்ந்து அசைவற்றுக்
கிடந்தன

தன்னை பின் தொடரச் சொன்ன
பாதங்கள்
விறைத்து கிடந்தன

என் போக்கில் சலிப்புற்று
பேசிய உதடுகள்
எனக்கு இறுதியாக சொல்ல
எத்தனித்த சொற்களை
அடைகாத்து வரண்டு கிடந்தன

************

எல்லாம் முடிந்து
அவர் எலும்புகளை எண்ணி
கடலில் கரைத்த மாலையின்
பின்னிரவில் என்
மனைவி சொன்னாள்

என் மகன் தன் வயிற்றில்
முதல் தடவையாக
உதைக்கின்றான் என


:நிழலி
17 June 2012

No comments: